ETV Bharat / entertainment

ரம்பாவிடம் குறும்புத்தனம் செய்த ரஜினிகாந்த்? இணையத்தில் வெடித்த சர்ச்சை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 9:32 PM IST

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ரம்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த உடனான அவரது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது நடிகர் ரஜினிகாந்த் விளையாட்டுத்தனங்களில் ஈடுபடுவார் என்று ரம்பா கூறும் வார்த்தைகளை கட் செய்து ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினிகாந்த் என்ற‌ ஹேஸ்டேக் உடன் பதிவிட்டு இணையவாசிகள் அந்த வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினிகாந்த் என்ற‌ ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் இணையவாசிகள்
ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினிகாந்த் என்ற‌ ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் இணையவாசிகள்

சென்னை: தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ரம்பா. ரஜினி, கமல், அஜித், விஜய் என அப்போதிலிருந்து தற்போது வரை உச்சத்திலிருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலான நடிகை ரம்பா, திரைப்படங்களுக்கு பிரேக் கொடுத்தார்.

என்னதான் நடிகை ரம்பா திரையுலகிற்கு பிரேக் கொடுத்திருந்தாலும், அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் ரசிகர்கள் மத்தியில் அவரது முகத்தை பதிவு செய்தே வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ரம்பா, நடிகர் ரஜினிகாந்த் பற்றி கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1997ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம், அருணாச்சலம். இப்படத்தில் ரம்பா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த பேட்டியில் அந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சம்பவம் பற்றி ரம்பா கூறும்போது, "அருணாச்சலம் சமயத்தில் இந்தி நடிகர் சல்மான்கான் வந்திருந்தார். அப்போது நான் அவரைப் பார்த்து கட்டிப்பிடித்து வரவேற்றேன். அதனை அங்கிருந்து ரஜினி பார்த்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு, ரஜினி படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, இயக்குநர் சுந்தர்.சி உடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

என்னை கை காட்டி இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். நான் அதனை பார்த்தபோது, எனக்கு என்னவென்று புரியவில்லை. பின்னர்தான் அவர் சொன்னார், வடமாநில நடிகர் வந்ததும் கட்டிப்பிடித்து ரம்பா வரவேற்கிறார், இங்கு வந்தால் மட்டும் எதுவும் பேசாமல் போய் அமர்ந்து விடுகிறார். தென்னிந்திய நடிகர்கள் என்றால் அவ்வளவுதானா என்று ரஜினி சொன்னதாகச் சொன்னார்கள். ரஜினி இதுபோன்று நிறைய குறும்புகள் செய்வார்.‌

ஒருநாள் படப்பிடிப்புத் தளத்தில் மின்சாரம் கட் ஆகி விட்டது. அப்போது யாரோ எனது தோளில் கைவைத்ததையடுத்து, நான் அலறினேன். கரன்ட் வந்ததும் யார் ரம்பா மீது கை வைத்தது என்று எல்லோரிடமும் கேட்டார். இதுபோல நிறைய விளையாட்டுத்தனங்கள் ரஜினி செய்வார்" என்று கூறியிருந்தார்.

இதனை‌யடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சிலர் ‘ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினிகாந்த்’ என்ற‌ ஹேஸ்டேக் உடன் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை கட் செய்து இணையத்தில் பதிவிட்டதையடுத்து, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சத்யராஜ் உடன் இணையும் வெற்றி - பூஜையுடன் தொடங்கிய புதிய படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.