ETV Bharat / entertainment

"நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா" - நடிகர் விஷால் அறிவிப்பு!

author img

By

Published : Mar 8, 2023, 7:02 PM IST

நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகள் ஓராண்டுக்குள் முடியவடையும் என்றும், பணிகள் முடிவடைந்ததும் இக்கட்டடத்தை கட்ட முக்கிய பங்களித்த நடிகர் விஜயகாந்திற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Appreciation
Appreciation

சென்னை: நடிகர் விஷால் லத்தி படத்தை தொடர்ந்து, 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். நாயகியாக ரிதுவர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் வினோத் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில், நடிகர் விஷால் இதுவரை நடித்திராத வித்தியாசமாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, சுனில் ஆகியோர் இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று(மார்ச்.8) நடைபெற்றது. இவ்விழாவில் விஷால், எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகள் ஓராண்டுக்குள் முடியவடையும் என்று கூறினார். இந்த நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் நடிகர் விஜயகாந்தின் பங்களிப்பு என்பது மிகப் பெரியது என்றும், நடிகர் சங்கத்தின் கட்டடத்தை அவர்தான் மீட்டார் என்றும் தெரிவித்தார். நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதே இடத்தில் நடிகர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் கூறினார்.

நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் பல ஆண்டுகள் இருந்தார். அவரது இருந்தபோதுதான் சங்கத்துக்காக வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் செய்து நிதி திரட்டினார். அனைத்து கடனையும் அவர் தலைமையிலான குழுதான் அடைத்தது. அதனை தொடர்ந்து நடிகர் சரத்குமார் சில காலம் தலைவராக இருந்தார். பின்னர் 2015ஆம் நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதையே இலக்காக வைத்து அந்த தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. மேலும், ரஜினி, கமலை வைத்து நடிகர் சங்க கட்டடத்துக்கு பூஜை எல்லாம் போடப்பட்டு பணிகள் தொடங்கின. அதன் பிறகு அந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கால் கட்டடப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் கட்டடம் கட்டும் பணிகள் 40 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக கூறப்பட்டது. இன்னும் 30 கோடி ரூபாய் தேவை என்றும், அதற்காக வங்கியில் கடன் பெற்றும், நடிகர் நடிகைகளிடம் நிதி பெற்றும் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்குள் கட்டிடம் கட்டிமுடிக்கப்படும் என்று தற்போது விஷால் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Women's Day Special: தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.