ETV Bharat / entertainment

லோகி ஒரு திரைச் சித்தன்.. மன்சூர் அலிகான் புகழாரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 1:41 PM IST

Mansoor Ali Khan: இயக்குநர் லோகேஷ் கனகராஜை ‘பாலஸ்தீனத்திற்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம் வாங்க’ என மன்சூர் அலிகான் அழைத்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கம் அளித்து இன்று (அக்.26) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Mansoor Ali Khan
மன்சூர் அலிகான்

சென்னை: தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மன்சூர் அலிகான். கொடூர வில்லன் கேரக்டர் முதல் காமெடி வில்லன் கேரக்டர் வரை பல படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான "லியோ" திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே லோகேஷ் கனகராஜை புகழ்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே, குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு, என்னையே அதிர்ச்சியடைய வைத்தது.

'லியோவில் தம்மாத்தூண்டு' என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனாக ஆக்கிவிட்டது. அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம், பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

லோகி ஒரு திரைச் சித்தன். 3,000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவதைக் கண்டேன்.

சில பாத்திரப் படைப்புகள் நீட்ட குறைத்தலின்போது, நாம் ஒன்றும் செய்ய முடியாது. கேப்டன் பிரபாகரன் 15,000 அடியில் எடுக்கப்பட்டது. என் வாழ்நாளில் 350க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியைப் பார்த்ததில்லை.

நான் தம்பி விஜய்யுடன் பல படங்களில் மெயின் வில்லனாக அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு, இப்போது குடும்பம் குடும்பமாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது. தவறாக வசூல் காட்டி வெளியே ‘ஹைனா’-வைப்போல் பலர் குறைக்கின்றனர். நான் எதேச்சையாக பேசுவது, ஊடகங்களில் பலமாக பரபரப்படைகிறது. பிணியில் கிடக்கும் நம் மண்ணை மீட்க, இனி தன்னலம் மறந்து அரசியல், திரைப் பணியில் என்னை அர்ப்பணிப்பேன்.

என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்ப்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிலிருந்து சுக, தன்னலம் துறந்த மன்சூர் அலிகான் மக்களுக்காக, மண்ணின் பெருமைக்காக, சக்சஸ் மீட்டில் நவம்பர் 1ஆம் தேதி சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நடிகர் விஜய் சேதுபதி சசிகுமார் வெளியிட்ட 'பிரம்ம முகூர்த்தம்' பட ஃபர்ஸ்ட் லுக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.