மதுரை: நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் டாக்டர் ரகுபதி ராகவன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரீத்தா. இவரும் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மதுரையில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் வார விடுமுறை நாட்களில் ஊருக்கு சென்று வருவது வழக்கம். நேற்று விடுமுறை என்பதால் ஊருக்கு சென்றிருந்த கார்த்திகேயன் இன்று காலை மீண்டும் பணிக்கு செல்வதற்காக தனது காரில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார்.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையாபட்டி விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பேருந்து மருத்துவரின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. உடனே அந்த அரசு பேருந்தை மறிப்பதற்காக கார்த்திகேயன் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.
மருத்துவர் பலி
அப்போது சாலையின் நடுவிலிருந்த சென்டர் மீடியன் மீது கார் பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் கார் பறந்து சென்று எதிர் திசையில் காரைக்குடியில் இருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து உள்ளே இருந்த கார்த்திகேயன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று போராடி காரில் சிக்கியிருந்த மருத்துவர் கார்த்திகேயன் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வெளியான சிசிடிவி காட்சி
விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து சிசிடிவில் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:கார் ஓட்டும்போது மாரடைப்பு - உயிரிழந்த ஓட்டுநர்