ETV Bharat / city

சித்திரை திருவிழா- மாஸ் காட்டிய மதுரையின் மாசி வீதிகள்!

author img

By

Published : Apr 6, 2022, 7:07 AM IST

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரையின் மாசி வீதிகள் மக்கள் தலைகளாலும் பாரம்பரிய கலைகளாலும் கோலாகல கொண்டாட்டத்தில் திளைத்து மகிழ்ந்தது.

மாஸ் காட்டிய மாசி வீதிகள்
மாஸ் காட்டிய மாசி வீதிகள்

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கோயில் வளாகத்திலேயே பக்தர்களின் பங்கேற்பின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 5) காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாஸ் காட்டிய மாசி வீதிகள்

இதனையடுத்து சித்திரை பெருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை வெள்ளி சிம்மாசனத்தில் கோயிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி, பிறகு அங்கிருந்து புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பக விருட்சம் வாகனத்தில் சுந்தரேசுவரரும் பிரியாவிடையும் எழுந்தருளி விதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கிய சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில் அம்மனும் சுந்தரேஸ்வரப் பெருமானும் வீதி உலா வருவதை ஆயிரக்கணக்கான மக்கள் மாசி வீதிகளில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் சிறுவர்கள் சிறுமிகள் மீனாட்சி அம்மன் போல வேடமணிந்தும், கோலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட வகையான பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தியவாறு வீதி உலா வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.