மதுரை கீரைத்துறை சேர்ந்த சபா என்கிற சபாரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கீரைத்துறை காவல்துறையினர் என் மீது 2008ஆம் ஆண்டு போலியான வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.
அப்போதிலிருந்து மதுரை மாநகரில் நடக்கும் குற்றசம்பவங்களில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத போதெல்லாம், என்னைக் குற்றவாளியாகச் சித்தரிக்கத் தொடங்கினர். இதனால் என் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
அந்த வகையில் மதுரை எஸ்எஸ் காலனி, சுப்பிரமணியபுரம், பரமக்குடி, கீரைத்துறை காவல் நிலையங்களில் என் மீது 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனடிப்படையில் காவல்துறை என்னை போலியான என்கவுண்டரில் கொலை செய்ய திட்டமிட்டு, அதற்கென சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
எனவே என்னைப் போலி என்கவுண்டர் செய்யாமல், சரணடைய வாய்ப்பு வழங்கி வழக்கு விசாரணைகளைத் தொடர அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை நேற்று(மார்ச்.9) விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு குறித்து தமிழ்நாடு டிஜிபி மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 2 கடைகளில் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை