ETV Bharat / city

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகராக நடித்தால் நன்றாக இருக்கும் - கவிஞர் வைரமுத்து

author img

By

Published : Jul 13, 2022, 10:41 AM IST

கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் போது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என கூறினார்.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகராக நடித்தால் நன்றாக இருக்கும்
கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகராக நடித்தால் நன்றாக இருக்கும்

கோயம்புத்தூர்: காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் இன்று வைரமுத்துவின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. திரை உலகில் அவர் கால் பதித்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாள் " வைரமுத்து இலக்கியம் 50" என்ற தலைப்பில் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் கோயம்புததூர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து, “கோவை நண்பர்கள் என் மீது நிபந்தனை இல்லாத பாசம் வைத்தவர்கள். இந்த 50 ஆண்டுகளில் நான் சாதித்தது என்று எதுவும் இல்லை. நான் பெற்ற விருதுகள் எல்லாம் உடன் விளைவுகள். இனிமேல் தான் தமிழுக்கு, தமிழர்களுக்கு சொல்ல வேண்டிய ஊக்க கருத்துக்கள், புத்தம் புதிய படைப்புகள் பற்றி சிந்திக்க கூடிய வயதில் நான் இருக்கிறேன்.

இன்று நடைபெற உள்ள விழாவில் சக்தி ஜோதி என்பவருக்கு விருது வழங்க உள்ளோம். பத்திரிகைகளால் தான் எனது படைப்புகள் வளர்ந்தது. 1992ஆம் ஆண்டு கோவையில் நடந்த ‘சிகரங்களை நோக்கி’ என்ற எனது விஞ்ஞான கவிதை நூல் வெளியிடப்பட்டதும், 60வது பிறந்த நாள் விழாவில் அப்துல் கலாம் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியதும் கோவையில் தான். அதனை என்றும் என்னால் மறக்க முடியாது. சினிமா பாடல்களைப் பொறுத்தவரை கொண்டாட்ட கருவி, கற்பிக்கிற கருவி(இலக்கியம்) என இரண்டு உள்ளது. இலக்கியம் ஒரு பக்கம், கொண்டாட்டம் ஒரு பக்கம் என இருந்த சினிமா தற்பொழுது கொண்டாட்டம் மட்டுமே போதும் என்று குறுகிவிட்டது.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகராக நடித்தால் நன்றாக இருக்கும்

வெகு விரைவில் இலக்கியம் பாதி கொண்டாட்டம் பாதி அல்லது இலக்கியம் மட்டுமே முழுமை என்ற நிலைக்கு சினிமா வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ் பெருமக்கள் அருள் கூர்ந்து இலக்கிய பாடல்களை கொண்டாடுங்கள், இலக்கிய பாடல்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். இலக்கிய பாடல்களுக்கு அபிநயம் பிடித்தால் நம்முடைய ரசனையும் வளர்கிறது என்று பொருள். நாங்கள் படிக்கின்ற பொழுது ஜெயகாந்தன், பார்த்தசாரதி, கண்ணதாசன், உள்ளிட்ட கவிஞர்கள் இருந்தார்கள். அப்பொழுது அச்சு ஊடகங்கள் தான் இலக்கியத்தை தூக்கி நிறுத்தியது.

தற்பொழுது கைப்பேசி வந்த பிறகு இந்த உலகம் இயேசுவுக்கு முன், இயேசுவுக்கு பின் என்று கூறுவது போன்று கைபேசிக்கு முன் கைபேசிக்கு பின் என்று மாறிவிட்டது இந்த மாற்றத்தை நம்மால் தவிர்க்க முடியாது. விஞ்ஞானம் என்பது நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம் தலை மீது சவாரி செய்யும் ஆனால் எந்த அளவிற்கு சவாரி செய்ய விடலாம் என்பதை சமூகம் தான் தீர்மானிக்க முடியும்.

பள்ளிகளில் வாரத்தில் இரண்டு வகுப்புகள் இலக்கிய வாசிப்பு வகுப்பு என்பதை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் அப்போதுதான் பள்ளிக்கூடங்களில் தமிழ் உச்சரிக்கப்படும். நீதிமன்றங்களிலாவது தமிழ் பெயரை உச்சரிக்கின்ற வாய்ப்பு கிட்டும் தமிழ் பெயர் வைப்பதில் அரசியல் பார்க்க வேண்டாம்.

தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதால் புவியியல், கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் பாடம் நடத்துவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருவதற்கு பதில் அளித்த வைரமுத்து, பிறப்பாட ஆசிரியர்கள் தமிழ் தெரிந்து அதனை கற்றுக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம் எனவும் அதே சமயம் தமிழை முறையாக படித்தவர்கள் தான் இலக்கணம் கற்றுத் தர முடியும் எனவும் பதில் அளித்தார்.

தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அறிஞர்களும், அரசுத்துறை அலுவலர்களும் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டால் இதற்கெல்லாம் நிவாரணம் காண முடியும் என நம்புகிறேன். கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க வேண்டும் என பல இயக்குனர்கள் தன்னை கேட்ட போது என்னிடம் தயக்கம் இருந்தது. ஏனென்றால் நாவல் படமாக்கப்படுகின்ற போது இரண்டு விதமான விளைவுகள் உண்டு ஒன்று நாவலில் இருப்பதைவிட சிறப்பாக எடுத்துக் காட்டுவது, மற்றொன்று நாவலில் இருப்பதைவிட குறைவாக மாறிவிடுவது.

கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் போது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவர் அதனை ஏற்று நடித்தால் அவர் நினைத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு விவகாரம்; சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.