ETV Bharat / city

வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி விசைத்தறி உரிமையாளர்கள் 25ஆவது நாளாகப் போராட்டம்

author img

By

Published : Feb 2, 2022, 3:11 PM IST

கோவை, திருப்பூர் மாவட்டத்தில்,கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு, காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 25ஆவது நாள் போராட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களிலும் தொழிலாளர்கள் வீடுகளிலும் கறுப்புக் கொடி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருப்புக் கொடி
கருப்புக் கொடி

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு வழங்கக்கோரி கடந்த 25 நாட்களாகக் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாகக் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறிக் கூடங்கள் இயக்கப்படாததால், இதனை நம்பி உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கறுப்புக்கொடி கட்டிப் போராட்டம்

வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி, வீடுகளில் கறுப்புக் கொடி கட்டிப் போராட்டம்

இந்த நிலையில் 25ஆவது நாளான இன்று கூலி உயர்வு வழங்க மறுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று விசைத்தறி கூடங்களிலும், வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சோமனூர் கிளை தலைவர் பழனிச்சாமி கூறுகையில், 'மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காலவரையற்றப் போராட்டம்

அதன் அடிப்படையில் கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆகியும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுக்குக் கூலி உயர்வு வழங்காததால் 25 நாட்களாக காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜவுளி உற்பத்தியாளர்களுக்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களிலும்; விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்.

ரூ.60 கோடி வருவாய் இழப்பு

அடுத்த கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போகிறோம். மேலும், வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1.25 கோடி மீட்டர் துணி உற்பத்தியும் நாளொன்றுக்கு ரூ.60 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதனிடையே தெக்கலூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்களுக்குக் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் குதிரையில் கறுப்புக் கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

இதையும் படிங்க: மகாமகம் குளத்தில் நீர் வெளியேற்ற தடை கோரிய வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.