ETV Bharat / city

இரண்டாம் காதலனுடன் கூட்டு சேர்ந்து முதல் காதலனை கொன்ற பெண் கைது

author img

By

Published : Sep 25, 2022, 10:29 PM IST

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் முதல் காதலனை இரண்டாம் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharatஇரண்டாம் காதலனுடன் கூட்டு சேர்ந்து முதல் காதலனை கொன்ற பெண் கைது
Etv Bharatஇரண்டாம் காதலனுடன் கூட்டு சேர்ந்து முதல் காதலனை கொன்ற பெண் கைது

சென்னை: மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (27). இவருக்கும் மாநகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரக்கூடிய சாலிகிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அப்பெண்ணிற்கு 12 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த 20 நாள்களாக விஜி அந்த பெண்ணுடன் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் (செப்-23) இரவு குடிபோதையில் இருந்த விஜியை சிலர் வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக அப்பெண்ணின் மகன்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த விஜியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னுக்கு பின் முரணாக பதில்: பின்னர் சிறுவர்களை அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வழக்கம் போல தாய் பணிக்குச் சென்றுவிட்டதாகவும், குடிபோதையில் இருந்த விஜி தங்களிடம் சிப்ஸ் வாங்க சொல்லி கடைக்கு அனுப்பியதாகவும், பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் ரத்த வெள்ளத்தில் விஜி இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர். சந்தேகமடைந்த காவல் துறையினர் மீண்டும் விசாரித்த போது, தினமும் விஜி அசிங்கமாக பேசி, வெளியில் விளையாட விடாமல் தடுத்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் விஜியை தாங்கள் கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

இதற்கிடையே காவல் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது பல தகவல்கள் வெளிவந்தன. கடந்த ஒரு மாதமாக பிரபு, அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்து வருவதும், அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த விவகாரம் முதல் காதலன் விஜிக்கு தெரியவர, பிரபுவுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்குமாறு அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

பலமுறை கூறியும் அப்பெண் பிரபுவுடனான உறவை துண்டிக்காமல் இருவரும் சுற்றி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜி அப்பெண்ணின் செல்போனில் இருந்து, பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.24) மாலை அப்பெண்ணின் வீட்டிற்கு வந்த பிரபு, மதுபோதையில் இருந்த விஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பிரபு அருகிலிருந்த கத்தியை எடுத்து விஜியின் கழுத்தில் குத்தியுள்ளார்.

பின்பு அப்பெண், பிரபு இருவரும் சேர்ந்து விஜியை கொலை செய்துள்ளனர். பின்னர் அப்பெண் தனது பிள்ளைகளிடம் தாங்கள் பணிக்குச் சென்று விட்டதாகவும், வீட்டிற்கு புகுந்து சிலர் விஜியை கொலை செய்துவிட்டு ஓடி விட்டதாக காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கூறி விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரபு மற்றும் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. சேலத்தில் பலர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.