ETV Bharat / city

'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தை நன்கு பராமரிக்க அறிவுறுத்தல்

author img

By

Published : Dec 25, 2021, 2:00 PM IST

'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற புதிய திட்டத்தை நன்கு பராமரிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

namkudiyiruppu namporuppu scheme in chennai corporation  TAMILNADU URBAN HABITAT DEVELOPMENT BOARD introduce new scheme  People should cooperate along corporation  நம் குடியிருப்பு நம் பொறுப்பு புதிய திட்டம்  இத்திட்டத்திற்காக 100 கோடி நிதி ஓதுக்கீடு தமிழ்நாடு  அத்தியவாசிய தேவைகள் 50 சதவீத பங்கீடு
“நம் குடியிருப்பு நம் பொறுப்பு”

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 1.80 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இக்குடியிருப்புகளையும், இதர சமுதாய உள்கட்டமைப்புப் பணிகளையும் பராமரிப்பது இன்றியமையாததாகும்.

இதுவரை வாரியமே இப்பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளது. வாரியத்தோடு குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடியிருப்போர் நலச்சங்கங்களும் இப்பராமரிப்புப் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பராமரிப்புப் பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் குடியிருப்பு நம் பொறுப்பு

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி, அரசாணை எண் (4D) No.55, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் புதிய குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்படும். மேலும், ஏற்கனவே இருக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சரியாகச் செயல்பட வழிவகை செய்யப்படும்.

புதிய திட்டத்தின் நோக்கங்கள்

  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளை நன்கு பராமரித்தல்.
  • பழுது - புதுப்பித்தல் பணிகளைச் சரியான நேரத்தில் மேற்கொள்ளுதல்.
  • புதுப்பித்தல் பணிகளை முறையாகச் செயல்படுத்துதல்.
  • குடியிருப்போரின் விண்ணப்பத்திற்கேற்ப கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.
  • திறம்படச் செயல்படும் குடியிருப்போர் நலச்சங்கங்களை உருவாக்குதல்.
  • பராமரிப்புப் பணிகளை முறையே குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் ஒப்படைத்தல்,
  • பொருளாதார நிலையில் குடியிருப்போர் நலச்சங்கங்களை மேம்படுத்துதல்.
  • வாரியம் - குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் சரியான ஒருங்கிணைப்பை உருவாக்குதல், தீர்ப்பு நெறிமுறைகளை உருவாக்குதல்.

மேலும் 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற திட்டத்தின் மூலம் குடியிருப்போர் நலச் சங்கங்களை ஈடுபடுத்தி குடியிருப்புகள் பராமரிக்கப்படும். குடியிருப்புகளின் பராமரிப்புச் செலவினங்களுக்கான மொத்த செலவில் 50 விழுக்காடு அரசாலும் மீதமுள்ள 50 விழுக்காடு குடியிருப்போர் நலச்சங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

ரூ.100 கோடி நிதி ஓதுக்கீடு

தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-2022ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.20 கோடியும், 2022- 2023ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.40 கோடியும், 2023 – 2024ஆம் நிதி ஆண்டிற்கு ரூ. 40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வாரியம் சென்னை, இதர நகர்ப்புறங்களில் 1.80 லட்சம் குடியிருப்புகளைக் கட்டியுள்ளது. மின்தூக்கி உள்ள குடியிருப்புகளுக்கு மாத பராமரிப்பு ரூ.750 ஆகவும், மின்தூக்கி இல்லாத குடியிருப்புகளுக்கு ரூ.250 ஆகவும் வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புக் கட்டணம் சரியாகச் செலுத்தப்படாததால் பராமரிப்புப் பணிகளை வாரியம் மேற்கொள்வது சிரமமாகத் திகழ்கின்றது. எனவே, இப்பொறுப்பு வாரியத்தின் துணையோடு குடியிருப்போர் நலச்சங்கங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

இக்குடியிருப்போர் நலச்சங்கங்களினால் வசூல்செய்யப்பட்டுள்ள பராமரிப்புத் தொகைக்கு ஈடான மானியம் அரசால் வாரியத்திற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடியிருப்போர் நலச்சங்கங்களின் பங்களிப்பு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பின் வழங்கப்படும். தினசரி பராமரிப்பு, சிறிய பழுதுபார்த்தல் முதலிய நம் குடியிருப்பு நம் பொறுப்பு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.

அத்தியாவசிய தேவைகள்

குடிநீர், மின்சாரம், மின்தூக்கி, பொதுவான இடங்கள் பராமரித்தல், முக்கியமான பழுது பார்த்தல் ஆகியவை வாரியத்தால் செயல்படுத்தப்படும். கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் வாரியத்தின் பங்கு 50 விழுக்காடும் குடியிருப்போர் நலச்சங்கங்களின் பங்களிப்பு 50 விழுக்காடும் உடன் செயல்படுத்தப்படும்.

மேலும் வாரியத்துடன் குடியிருப்போர் நலச்சங்கங்களின் ஒத்துழைப்பு, பங்களிப்பு, சமுதாய பொறுப்புடன் இணைந்து நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:DMK protest against seeman: அரசுக்கு எதிராக பேசக் கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல - சீமான்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.