ETV Bharat / city

வேளாண் பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

author img

By

Published : Mar 19, 2022, 10:57 PM IST

2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அதன் சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

வேளாண் நிதிநிலை அறிக்கை: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து
வேளாண் நிதிநிலை அறிக்கை: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

முதலமைச்சர் ஸ்டாலின்

"அனைத்துத் துறைகளையும் விட வேளாண்மைத் துறை என்பது அதிகமாக வளர்ந்தாக வேண்டும். ஏனென்றால், வேளாண்மை என்பது தொழில் மட்டுமல்ல; அது வாழ்க்கை, பண்பாடு தொடர்புடையது ஆகும். உயிர்காக்கும் துறையாகும். மக்களைக் காக்கும் மகத்தான துறையாகும்.

அதனால்தான் இதற்கு என தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது என கழக ஆட்சி அமைந்ததும் முடிவெடுத்தோம். வேளாண் தொழிலை நம்பி வாழும் உழவர் பெருமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிப்பதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. உழவர்களே, உங்களுக்குப் பின்னால் இந்த அரசாங்கம் இருக்கிறது என்ற உந்து சக்தியை இந்த அறிக்கை கொடுத்துள்ளது"

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி

"தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. கரும்பு சாகுபடி பெருமளவு குறைந்துள்ளதை புரிந்துகொண்ட தமிழ்நாடு அரசு, விவசாய நிதிநிலை அறிக்கை மூலம் கரும்பு விவசாயம் செய்வதற்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்ததை வரவேற்கிறேன்.

நெல் சாகுபடி இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது, மிகப்பெரிய சாதனையாகும். குறுவை சாகுபடியை டெல்டா விவசாயிகள் வருமானம் உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையாகும்"

மதிமுக பொதுச்சயலாளர் வைகோ

"வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வழிகோலியுள்ளது. ஒட்டுமொத்தமாக வேளாண்துறையின் வளர்ச்சிக்கு ரூ. 33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும். இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டில் வேளாண்துறை உச்சத்திற்கு செல்ல வழிவகுக்கும்"

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

"வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும் கட்டுப்படியாகும் கொள்முதல் விலை கனவாகவே தொடர்கிறது. உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் மற்றும் புதிதாக திறக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையாகும்"

அமமுக பொதுச்சயலாளர் டிடிவி தினகரன்

"விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. நெல்லுக்கு ஆதார விலையைக் கூட்டியிருப்பதாகக் திமுக அரசு கூறுகிறது.

ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சரியான நேரத்தில் திறக்காமலும், திறந்த பிறகு சரியான முறையில் நெல் கொள்முதல் செய்யாமலும் இருந்ததால் லட்ச கணக்கிலான நெல் மூட்டைகள் வீணாகின. மொத்தத்தில் தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட், கறி செய்து சாப்பிட முடியாத காகிதச் சுரைக்காயாக காட்சியளிக்கிறது."

பூவுலகின் நண்பர்கள்

"வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் 2050ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என அண்மையில் வெளியான ஐ.பி.சி.சியின் இரண்டாவது பணிக்குழு அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அதிகம் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் தேவைப்படாத இயற்கை வேளாண்மை, சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதை வரவேற்கிறோம்"

நாகை மாலி எம்எல்ஏ (சிபிஎம்)

"வேளாண் விலை பொருளுக்கு எதிர்பார்த்த விலை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒரு டன் கரும்புக்கு 195 ரூபாய் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இன்னும் கூடுதலாக அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை குறித்த அறிவிப்புகள் இல்லை. தஞ்சையில் உள்ள அரசுக்கு சொந்தமான அறிஞர் அண்ணா சர்க்கரை அலை குறித்த அறிவிப்புகள் இல்லை"

கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ (கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி)

"விவசாயத்தை நவீன மயமாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், படித்த இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளும் இந்த பட்ஜெட்டில் உள்ளன. புதிய உழவர் சந்தை உருவாக்கும் முயற்சி, வீட்டு தோட்டம் உள்ளிட்டவை வரவேற்கதக்கது"

தளி ராமச்சந்திரன் எம்எல்ஏ (சிபிஐ)

"வேளாண் துறைக்கு 33,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டிருப்பதை வரவேற்கிறோம். கரும்பு விவசாயிகளுக்கு தித்திக்கும் செய்தி இந்த பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தது. விவசாயிகள் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய உழவர் சந்தையை நவீனப்படுத்தும் திட்டத்தை வரவேற்கிறோம்".

இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட் 2022-23: ஊறுகாய் புல் உற்பத்தி அமைப்புக்கு ரூ.10.50 லட்சம் மானியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.