தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது.
அதில் பேசிய அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார்.
இந்திய கணக்காய்வு தணிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கணக்காய்வு தணிக்கை (சிஏஜி) அறிக்கைத் தாக்கல் வெளியிடப்பட்டது. அதில், "அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்செய்யப்பட்டதால், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.424 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்முதல்செய்ததால், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.424 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.எம்.ஆர். கார்ப்பரேஷன் மின் நிறுவனத்திடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்
மேலும், சந்தை விலையில் ரூ.5.42, ரூ.3.39-க்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ.12-க்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது கடந்த அரசு. அதில், மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் நடந்த செலவின விவரங்களை ஆய்வுசெய்து ஐந்து தணிக்கை அறிக்கைகள் தாக்கல்செய்யப்படவுள்ளதாக நேற்று முன்தினம் (ஜூன் 23) முதல் தகவல்கள் வெளியான நிலையில், நேற்று தணிக்கை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.