ETV Bharat / city

புறம்போக்கு நிலத்தைவிட்டு வெளியேறினால் மாற்று இடம் வழங்க தயார் - அரசு உத்தரவாதம்

author img

By

Published : Feb 4, 2022, 2:10 PM IST

பெத்தேல் நகர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வது தொடர்பாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலிக்கத் தயார் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Government
Tamil Nadu Government

சென்னை: பெத்தேல்நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் அண்ணாதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், “ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடில்லா ஏழை மக்கள் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். அங்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு அரசு செய்து தந்துள்ளது.

அதேபோல் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்ட வரிகளை மக்கள் செலுத்திவருகின்றனர். மேலும் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது, அரசு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்கு பட்டா கோரி அரசுக்கு விண்ணப்பித்த நிலையில், 15 ஆண்டு கால போராட்டங்களுக்குப் பின், அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தது. மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவும் பிறப்பித்ததாகக் கூறினார். அதன்பின் பல்வேறு காரணங்களால் பட்டா வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டதால், மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. எந்த நேரத்திலும் வீடுகள் இடிக்கப்படலாம் என்பதால், தங்களை வெளியேற்றத் தடைவிதிக்க வேண்டும். அரசின் மக்கள் நலத் திட்டப்படி பட்டா வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டப்படி நடைமுறைப்படுத்தி, பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

பின்னர் நீதிபதிகள், “மக்கள் நலத் திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்துள்ளது என்பதால், இந்த இடத்தை காலிசெய்ய தயார் என உத்தரவாதம் அளித்தால் உத்தரவு பிறப்பிக்கப்படும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “நீதிமன்றம் கூறியதைப் போல, தற்போதைய இடத்தை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான மனுதாரர் சங்க கோரிக்கையைப் பரிசீலிக்கத் தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக விளக்கமளிக்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: PG Neet 2022: முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.