சென்னை: சட்டப்பேரவைத் தலைவராக தேர்வுச்செய்யப்பட்ட அப்பாவுவை வாழ்த்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி சட்டப்பேரவையில் பேசினார்.
அப்போது, “எம் ஜி ஆர், ஜெயலலிதா இரு தெய்வங்களையும் வணங்குகிறேன். சட்டப்பேரவைத் தலைவர் 2001இல் ராதாபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் 2006ஆம் ஆண்டில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ராதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபாநாயகராக அமர்ந்துள்ள அப்பாவு-க்கு அதிமுக கட்சியின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பொது தேர்தலுக்கு பிறகு சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்ற சிவசங்கர் பிள்ளை நேர்மையாக சட்டப்பேரவையைத் தொடங்கிய வரலாறு உண்டு. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் சட்டப்பேரவையும் ஒன்று. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்பது ஒரு நாணயத்தின் இருபக்கம் போன்றது. அதில் ஒருபக்கம் இல்லையென்றாலும் "செல்லாக்காசு" போல ஆகிடுவோடும்.
பேரவைத் தலைவர் ஒரு ஆசிரியராகவும் இருந்தவர். ஆகையால் உணர்ச்சி, கோபம் எல்லாவற்றையும் கடந்து நடுநிலையோடு ஒரு ஆசிரியர் போல பேரவைத் தலைவர் நடந்து கொள்ள வேண்டும். எங்கள் உறுப்பினர்கள் பல நல்ல கருத்துக்களை பேரவையில் தெரிவிக்க அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பேரவை நாட்கள் முழுமையாக நடைபெற எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்.
சட்டப்பேரவையின் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்களுக்கு அதிமுக சார்பாக தெரிவித்து கொள்கிறேன். என்னை எதிர்க்கட்சி தலைவராக தேர்தெடுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர், கட்சி உறுப்பினர்களுக்கு இந்த பேரவையில் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை பெரும் வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற வைத்த எடப்பாடி தொகுதி மக்கள், கூட்டணி கட்சியினர் வெற்றிபெற்ற தொகுதியின் வாக்காளர்களுக்கு என் நன்றிகள்” என்று பேசினார்.