ETV Bharat / city

கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கை மீதான புதிய 16 அறிவிப்புகள் என்னென்ன?

author img

By

Published : Apr 13, 2022, 10:50 PM IST

தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 85 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.13) அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.13) கால்நடை பராமரிப்புத்துறையில் 16 புதிய அறிவிப்புகளை மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அவற்றில் முக்கிய அறிவிப்புகளாக, தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் 85 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். அத்துடன், 37 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு 25 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.20 கோடி செலவில் ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் மற்றும் பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதற்கு 'வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்புகளைக் கீழே காணலாம்.

1. தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் 85 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்

2. கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு 37 புதிய கட்டடங்கள் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

3. வள்ளலாரின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவில்லாத கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் மற்றும் பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதற்கு வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் 20 ஒரு கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும்.

4. செட்டிநாடு கால்நடை பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை, கோழி குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலை ஆகியவை 14 கோடியே ரூ.73 லட்சம் செலவில் நிறுவப்படும்

5. தொலைதூர கிராமங்களில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 7 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

6. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 15 மாவட்டங்களில் ஒன்பது உப வடிநிலப் பகுதிகளில் கால்நடை பராமரிப்பு பணிகள் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

7. உதகை மாவட்ட கால்நடை பண்ணையில் நோய் இல்லாத உரை விந்து குச்சிகளை உற்பத்தி செய்ய காளைகளுக்கான தனிமைப்படுத்துதல் நிலையம் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும்.

8. நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான(250 கோகழிகள்) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

9. கால்நடை பராமரிப்பு துறையின் உறை விந்து உற்பத்தி நிலையங்களில் தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களுக்கு RTPCR இயந்திரங்கள் 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

10. 2,000 ஏக்கரில் கால்நடை தீவனப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு 3,000 மானியமாக வழங்கும் திட்டம் 60 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

11. பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு 25 % மானிய விலையில் பண்ணை கருவிகளை வழங்கி விவசாயிகளை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டம் 42 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

12. கரூர் மாவட்டத்தில் புழக்கடை கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்

13. தமிழ்நாட்டிலுள்ள நாட்டின நாய்களுக்கான (ராஜபாளையம்,கன்னி, சிப்பி பாறை மற்றும் கோம்பை) இனப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஒரு கோடி ரூபாய் செலவில் தென்காசி மாவட்டத்தில் நிறுவப்படும்.

14. கிராமப்புற முன்னேற்றத்திற்கான வெண்பன்றி இனப்பெருக்கம் மற்றும் உள்ளீட்டு மையம் தொண்ணூற்று ஒன்பது லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்படும்.

15. நாட்டு குட்டை மாடுகளுக்கான பாதுகாப்பு மையம் 86 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள கால்நடை அறிவியல் முதுகலைப் ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்படும்

16. உம்பளாச்சேரி மாடுகளின் இனத்தை பல்துறை அணுகுமுறையின் மூலம் அதன் பூர்வீக வாழ்விடங்களில் பாதுகாத்தல் எனும் திட்டம் 28 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: வடலூர் சத்திய ஞான சபையில் 6 கால தைப்பூச ஜோதி தரிசனம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.