ETV Bharat / city

மாஜி மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு புகார்... நீதிமன்றம் என்ன சொல்கிறது?

author img

By

Published : Apr 4, 2022, 3:46 PM IST

குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அப்போது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலைக் கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தள்ளி வைப்பு: அந்த மனுவில், 'ஏற்கெனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்தேன்.

அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். தன் குழந்தைகளை சந்திக்கவிடாமல் செய்யும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட்டினை மோனிகா பெற்றுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.