ETV Bharat / city

’12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது...’ - அன்பில் மகேஷ் தகவல்

author img

By

Published : May 10, 2021, 8:36 PM IST

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் நலன் முக்கியம் என்பதால் தேர்வு குறித்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, TAMILNADU HSC EXAMINATION, MINISTER ANBIL MAHESH POYYAMOZHI
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தல் ஆகியவை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே.10) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், உயர் கல்வித்துறை (கூடுதல்) செயலர் அபூர்வா, அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்றாலும்கூட மாணவர்கள் உடல் நலம் அதைவிட முக்கியமானது என்பதால், நன்றாக ஆலோசித்து மட்டுமே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பின்பு அவரின் அறிவுறுத்தலின்படி முடிவுகள் எடுக்கப்படும்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாளையும் (மே.11), நாளை மறுநாளும் (மே.12) மேலும் சில குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.

பள்ளிகளின் கட்டமைப்பு என்பது நகர்ப்புறங்களில் ஒரு மாதிரியாகவும், கிராமப்புறங்களில் ஒரு மாதிரியாகவும் உள்ளது. அதன் சீர்திருத்தம் குறித்தும், கரோனா காலங்களில் எப்படிப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.

12ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வருவதில் சிக்கல் இருப்பதால், மாணவர்கள் தேர்வுக்கு வந்தாலும்கூட அதனால் வீட்டில் உள்ளவர்களையும், மற்ற மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மற்ற மாநிலங்களில் எப்படிப்பட்ட நிலை கையாளப்பட்டுள்ளது என்பதை ஆராய, செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு, நீட் சிறப்பு வகுப்புகள் தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னரே பயிற்சி குறித்து விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவல் துறை விவகாரங்களில் நேரடியாக எந்த அமைச்சர்களும் தலையிடக்கூடாது: ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.