ETV Bharat / city

'மழலையர் பள்ளி திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை'

author img

By

Published : Oct 19, 2021, 6:44 AM IST

கரோனா காலகட்டம் என்பதால் குழந்தைகளின் உடல்நலனை மனத்தில் கொண்டு மழலையர் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ்
செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ்

சென்னை: சென்னையிலுள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற 'இல்லம் தேடிக் கல்வி' பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் - தன்னார்வலர்களுக்கான இணையதளம் தொடக்க விழாவினை அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார்.

மேலும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கான பரப்புரை வாகனத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இந்த வாகனத்தில் கலைக்குழுவினர் சென்று இந்தத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்

அதன்பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது, “கரோனா தொற்றின் காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் உள்ளன. இதனைப் போக்குவதற்காக இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாகப் பலர் பதிவுசெய்ய முன்வர வேண்டும்.

பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்தவர்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பட்டம் பெற்றவர்கள் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிக்கலாம். இந்தத் திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதம் இந்தத் திட்டமானது நடைமுறையில் இருக்கும். தொடர்ந்து ஆறு மாத காலத்திற்கு இந்தத் திட்டம் செயல்படும் திருச்சி, தஞ்சாவூர் ,நாகப்பட்டினம், கடலூர், திண்டுக்கல் போன்ற 12 மாவட்டங்களில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு

மாணவர்களுக்கு விளையாட்டுடன்கூடிய கல்வியைப் போதிக்கக்கூடிய வகையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவர்களுடைய கற்றல் குறித்த ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்.

இந்தக் கற்றல் வழி வகுப்புளை எல்லாம் அந்தந்தப் பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கற்றல் இடைவெளியை இந்தத் திட்டம் குறைக்கும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க ஆலோசித்துவருகிறோம்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வகுப்புகள் வாரியாகக் கையேடு தயார்செய்து தன்னார்வலர்களுக்கு கொடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதில் பல்வேறு தரப்பினர் கூறும் கருத்துகளும் சேர்க்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். சோதனை அடிப்படையில் நடைபெறும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வாரத்திற்குள் ஏதாவது ஒரு மாவட்டத்தில் நேரடியாகத் தொடங்கிவைப்பார்.

நர்சரி பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு

தமிழ்நாட்டில் கரோனாவிற்குப் பின்னர் பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்த்துள்ளோம். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் நண்பர்கள் பள்ளிக்கு வராவிட்டால் அது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தற்போதுவரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது மட்டுமே முடிவுசெய்துள்ளோம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். மழலையர், அங்கன்வாடி பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளைத் தயார்செய்த பின்னர்தான் நர்சரி பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

செய்தியாளரைச் சந்தித்த அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகள் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த வற்புறுத்தி பெற்றோரையோ மாணவர்களையோ கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் கட்டாததால் மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழு, ஜூம் அழைப்பு போன்றவற்றைத் தடைசெய்யக் கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு நம்பி அனுப்பிவைக்க வேண்டும். அவர்களுக்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரள பெருவெள்ளம் - திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.