ETV Bharat / city

HR&CE Department: புதிய கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Nov 15, 2021, 1:52 PM IST

இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) சார்பில் கோயில் நிதியில் தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகள் தவிர புதிதாக கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம், Madras High court, Hindu Religious and Charitable Endowments, இந்து சமய அறநிலையத்துறை
உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) மானியக் கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்து கோயில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சார்பில் பரமத்திவேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் விளாத்திகுளத்திலும் என நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறைச் செயலர் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பித்தார்.

அரசுக்கு அதிகாரம் இல்லை

இந்த அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரியும், அதை ரத்துசெய்து கோயில் சொத்துகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், "இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. கோயில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

கோயில் நிதி கோயில்களுக்கு மட்டுமே

20 ஆயிரத்திற்கும் மேலான கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை. கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாகச் சொத்து எதுவும் இல்லை. முதலமைச்சர் தொகுதி என்ற காரணத்தினால் அங்கு அவசரமாகக் கல்லூரி தொடங்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு ஆட்சேபங்களைப் பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும். கோயில் நிர்வாகத்திலிருந்து எந்த விண்ணப்பமும் அளிக்கப்படாமல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகங்களும் கல்லூரி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. கோயில்களிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. எனவே, உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோயில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என வாதிடப்பட்டது.

அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்

தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர், "இது அரசின் கொள்கை முடிவு. இந்து சமய அறநிலையத் துறை, சட்டத்தைப் பின்பற்றியே கல்லூரிகளைத் தொடங்குகிறது. பல கோயில்களிலிருந்து பொது நிதிக்குப் பெறப்பட்ட பங்களிப்பு நிதியிலிருந்துதான் கல்லூரிகளும், மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.

பல கோயில்களில் கடந்த 11 ஆண்டுகளாக அறங்காவலர்கள் இல்லை. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் அக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர். இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.

மேலும், தற்போது எட்டு கல்லூரிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், கொளத்தூரில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டுவிட்டதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்து மத வகுப்புகள் அவசியம்

இவ்விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "கோயில் நிதியைப் பயன்படுத்துவதால் சட்டவிதிகளைப் பின்பற்ற வேண்டும். சட்டப்படிதான் கல்லூரிகள் தொடங்க வேண்டும்" என அறிவுறுத்தினர்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடிப்படை நடைமுறைகள் பின்பற்றாமல் தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.

அதேசமயம், நான்கு கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் தொடங்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் தொடங்க வேண்டும் எனவும், கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.

பின்னர் மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஐந்து வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பு: குமரியில் ஸ்டாலின் இன்று ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.