ETV Bharat / city

விமானத்தின் கழிவறையில் சிக்கிய 32 தங்கக்கட்டிகள்; கடத்தல் ஆசாமி யார்? - தேடுதலில் சுங்கத்துறையினர்

author img

By

Published : Sep 16, 2022, 3:47 PM IST

துபாயிலிருந்து இன்று(செப்.16) காலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் கழிவறையிலிருந்து 32 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், தப்பியோடிய கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

கடத்தல் ஆசாமி யார்
கடத்தல் ஆசாமி யார்

துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று(செப்.16) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த நிலையில், அந்த விமானம் மீண்டும் சென்னையிலிருந்து உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு புறப்பட்டுச்செல்லும். இதனால் விமான ஊழியர்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த ஊழியர்கள், சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் உடனடியாக பாதுகாப்புப் படையினரும், சுங்கத்துறையினரும் விரைந்து வந்து விமானத்துக்குள் ஏறி அந்த பார்சலை தண்ணீர் தொட்டியிலிருந்து எடுத்து, மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்ததில், அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதற்குள் மொத்தம் 32 தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் எடை 3.730 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.65 கோடி ஆகும். பின்னர் அந்த தங்கக்கட்டிகளை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்தனர். மேலும் விமானத்தில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் விமான நிலையத்தின் வருகைப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஆகியவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்கக் கட்டிகளை கடத்தி வந்து விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை சுங்க அலுவலர்கள் தீவிரமாகத்தேடி வருகின்றனர். இந்த கடத்தல் ஆசாமி சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தங்கப்புதையல் என கூறி ரூ. 10 லட்சம் மோசடி...ஏமாந்த மளிகை கடைக்காரர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.