ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை; கணக்கில் வராத ரூ.11.32 கோடி

author img

By

Published : Jan 20, 2022, 7:55 AM IST

Updated : Jan 20, 2022, 10:08 AM IST

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

DVAC searches 57 premises linked ex-minister K P Anbalagan house
DVAC searches 57 premises linked ex-minister K P Anbalagan house

சென்னை: முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி ரூபாய் வரை சொத்துக்குவித்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலின் போது அன்பழகன், குறிப்பிட்ட சொத்துக்களின் மதிப்பு 53 லட்சத்து 56 ஆயிரத்து 889 என்றும், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் 26 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 790 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தர்மபுரி மாவட்டம் மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை

கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவிப்பு

கே.பி. அன்பழகன் 2006ஆம் ஆண்டில் முதல் இந்தாண்டு வரை ஐந்தாவது முறையாக பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அத்துடன் 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கூடுதலாக வேளாண்துறையையும் கவனித்து வந்தார். இந்த காலகட்டத்தில் தனது உறவினர்களின் பெயரில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத சொத்துக்களை வாங்கியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்த லஞ்ச ஒழிப்புத்துறையின் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஏப்ரல் 24ஆம் தேதி வரை, அவரது உறவினர்கள் பெயரில் நகைகள், நிலங்கள் முதலீடுகள், விவசாய நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் அன்பழகன், அவரது உறவினர்களின் வருமானம் ரூ.23 கோடியே 59 லட்சத்து 31 ,984 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் 13 கோடியே 32 லட்சத்து 92 ஆயிரத்து 231 ரூபாய் குடும்ப செலவு, தேர்தல் செலவு, வருமான வரி செலுத்துதல், கடன் செலுத்துதல், காப்பீட்டுத் தொகை செலுத்துதல் என செலவு செய்யப்பட்டுள்ளது. அப்படி இந்த ஐந்தாண்டில் அவர் 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் கணக்கில் வராத சொத்துக்களாக குவித்துள்ளார்.

அவருக்கு பாக்கியலட்சுமி தியேட்டர்ஸ் நிறுவனத்தில் 50 விழுக்காடு பங்குகள், எஸ்.எம்.ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தில் 50 விழுக்காடு பங்குகள், மகன் சசிமோகன் பெயரில் AMPS என்னும் நிறுவனம், மற்றொரு மகன் சந்திரமோகன் பெயரில் அன்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மனைவி பெயரில் பாக்கியலட்சுமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் உள்ளது.

இதையும் படிங்க: கே.பி. அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு புகார்

Last Updated : Jan 20, 2022, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.