சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருவதோடு, அவற்றின் விற்பனையையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதால் அவற்றுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்த தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இத்தகைய போதைப் பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு செயலாளரும், உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையருமான செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களுக்கான தடை மே 23ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்த தடையை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த போதைப் பொருட்களை உட்கொள்வாதால் உடலுக்கு தீமை ஏற்படுகிறது. எனவே இதனை உற்பத்தி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், புகையிலை மற்றும் நிகோடின் உணவுகளில் மூலப்பொருளாக இன்று பரவலாகப் வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் எளிதாக சந்தையில் கிடைகின்றன. பள்ளி மாணவர்கள், குழந்தைகள், இளையவர்கள், கூலியாட்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் இவற்றை உண்பதால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றனர்.
மேலும், குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவை உணவுப் பொருட்களாகும். இதில் புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் குட்கா மற்றும் பான் மசாலா உணவுப் பொருட்களுக்கு தடை விதிப்பது நல்லது.
புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்த தயாரிப்புகளின் நுகர்வு மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆபத்தில் கொண்டு செல்லும். அதேசமயம் தடையின்றி இந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதிக்கும். எனவே இது தடை செய்யப்பட வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் அருகே இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் காவல் துறையினர் சோதனை செய்ய வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி- 11 பேர் கைது!