ETV Bharat / city

அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்... ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த வங்கி ஊழியரின் நண்பர் கைது

author img

By

Published : Aug 14, 2022, 12:45 PM IST

அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி நகைக்கடன் கிளையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியரின் நண்பரை தனிப்படை காவலர்கள் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த வங்கி ஊழியர்
ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த வங்கி ஊழியர்

சென்னை: அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் இயங்கிவரும் ஃபெடரல் வங்கியின் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, தங்க நகைகளை அடகு வைப்பதற்காக நேற்று (ஆக.13) மதியம் 2.50 மணியளவில் வந்த இரண்டு வாடிக்கையாளர்கள், கழிவறையில் இருந்து ஊழியர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டுள்ளனர்.

சந்தேகம் அளித்த ஊழியரின் செயல்: இதனால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில் அரும்பாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ஊழியர்கள் பலர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்ட நிலையில், அம்மூவரும் நகைக்கடன் நிறுவனத்தின் கிளை மேலாளர் சுரேஷ், ஊழியர் ராஜலட்சுமி, காவலாளி சரவணன் என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலராகப் பணியாற்றி வந்த பாடி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் நேற்று (ஆக. 13) சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதும், மாசா குளிர்பானத்தில் வாங்கி வந்து காவலாளி சரவணன் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கியதும் தெரியவந்தது.

15 நிமிடங்களில் கொள்ளை: மேலும், முருகன் கொடுத்த தகவலின் பேரில், மதியம் 2.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பின்வழியாக நிறுவனத்திற்குள் இருவர் நுழைந்துள்ளனர். பின்னர், முருகன் உள்பட மூவருமாக சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளைத் திருடி பையில் போட்டுக்கொண்டு தப்பித்ததும் தெரியவந்தது.

குறிப்பாக, இந்த கொள்ளை சம்பவம் 15 நிமிடங்களில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அந்நிறுவனத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

ஒருவர் கைது: மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் பதிவுகளை எடுத்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன சோதனைச்சாவடி அமைத்தும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி நகைக்கடன் கிளையில் நடந்த கொள்ளை சம்மந்தமாக, இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட வங்கி ஊழியர் முருகனின் நண்பரும், ஜிம் உரிமையாளருமான பாலாஜி என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு அரும்பாக்கம் காவல் நிலையம் சென்று கைது செய்யப்பட்ட பாலாஜியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், திருடர்கள் திருவண்ணாமலைக்கு தப்பிச்சென்றதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை திருவண்ணாமலை விரைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரும்பாக்கம் கொள்ளை வழக்கு... குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 1 லட்சம் பரிசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.