ETV Bharat / city

'குடும்ப அரசியல் நடத்தும் ஸ்டாலினின் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது?'

author img

By

Published : Feb 4, 2022, 1:50 PM IST

Updated : Feb 4, 2022, 2:38 PM IST

குடும்ப அரசியல் நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது? எனக் கேள்வி எழுப்பும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உங்கள் தமையன் சொன்ன ரகசியம் (நீட் ரகசியம்) இனியாவது வெளியே வருமா? எனவும் நக்கலான வினா ஒன்றையும் தொடுத்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் முடியப் போகின்றது. எங்கள் ஆட்சி 'விடியல் ஆட்சி' என்றார்கள். மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான் நடந்துவருகின்றது. 'ஓட்டுப் போடாதவர்களும் எங்களை விரும்புகின்ற அளவுக்கு நாங்கள் ஆட்சி நடத்துவோம்' என்றார்.

தமிழ்நாட்டில் எங்குத் தொட்டாலும் ஊழல், எதற்குள் நுழைந்தாலும் கட்டிங். நேர்மையான அலுவலர்கள் என்று பிம்பமாக்கப்பட்டவர்களை நியமித்துப் பாதுகாப்பு அரண்போல எல்லா இடங்களிலும் தங்களுக்குச் சாதகமான ஊழலில் பெயர்பெற்ற அலுவலர்கள் மூலம் தமிழ்நாட்டைச் சூறையாடுவதுதான் நடந்துவருகின்றது. மிகக் குறுகிய காலத்திற்குள் மிக மோசமாக தமிழ்நாடு நிர்வாக அமைப்பை மாற்றியதில் ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார்.

ஊழல் குறித்து பேசாதவர்

தமிழக முதல்வர் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பொங்கல் பரிசைக் கூடச் சிறப்பாக கொடுக்க முடியாத நிர்வாகம் நடத்தி வரும் தமிழக முதல்வர், அதில் நடந்த ஊழல் குறித்து இன்று வரையிலும் பேசாமல் இருப்பவர் இன்று புதிதாக அனைத்திய சமூக நீதி கூட்டமைப்பு என்பதனைத் தொடங்கி 37 தேசியத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் "சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதியைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

  1. யாருக்கெல்லாம் இந்தக் கடிதம் எழுதியுள்ளார் என்பதனை நாம் பார்த்தால் அவர்களின் தகுதியும் தராதரமும் நமக்குப் புரியும்?

தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு எவரும் கட்சித் தலைமைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ள மு.க. ஸ்டாலினைப் போலவே...

  • கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் என்ற பகுதியை இந்தியாவின் பிரச்சினைக்குரிய பகுதியாகத் தங்கள் சுய லாபத்துக்காக மூன்று தலைமுறையாக வைத்திருந்த பரூக் அப்துல்லா, (J&K National Conference), மெகபூபா முப்தி (J&K PDP)
  • ஐந்து தலைமுறை நேரு பரம்பரையில் எச்சமும் சொச்சமுமாக இடைச்செருகலாக வந்து பொம்மை மூலம் இந்தியாவை ஆள முடியும் என்று நிரூபித்த சோனியா அம்மையார் (Congress)
  • தன் குடும்ப சுயநலத்துக்காக பிகார் என்ற மாநிலத்தையே புதைகுழிக்குள் வைத்து மக்கள் எழ முடியாத அளவுக்குக் கடந்த காலத்தில் காட்டாட்சி புரிந்த லாலு பிரசாத் யாதவ் (RJD)
  • ஊழலுக்கென்று இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கிய சரத்பவார் (NCP)
  • இந்தியாவில் மோடியின் நிர்வாகத் திறமையைக் கண்டு கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் வேரடி மண்ணோடு புடுங்கி எறியப்பட்ட இரண்டு கம்யூனிஸ்ட்கள் டி. ராஜா (CPI), சீதாராம் யெச்சூரி (CPI-M)
  • காவல் துறை ஆணையர்கள் என்பவர்கள் எங்களுக்கு மாதாந்திர தண்டல் வசூலித்துத் தரக் கடமைப்பட்டவர்கள் என்று அலங்கோல ஆட்சி நடத்திவரும் உத்தவ் தாக்ரே (Shiv Sena)
  • அலங்கோல ஆட்சி நடத்துவதே என் பாணி என்று மேற்கு வங்க மண்ணின் மைந்தர்களைக் கூட்டு பாலியல் செய்ததைக் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்த மம்தா பானர்ஜி (TMC)… என்று மொத்தம் 37 பேருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் காவிரி நதி நீர்ப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய முடியாது. கச்சத்தீவு வாயே திறக்க முடியாது. இலங்கைப் பிரச்சனை பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளும் அவ்வப்போது முடிவுக்கு வந்துவிடுகின்றன.

17 ஆண்டு அதிகாரத்தைச் சுவைத்தீர்களே!

முல்லைப் பெரியாறு என்பது முடிந்துபோன ஒன்று. கடந்த ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், அவர்களுடன் திமுக கூட்டாளியாக இருந்த சமயங்களில் எல்லாம் எதைப் பற்றியும் பேசியதில்லை. எந்த உரிமைப் பிரச்சினைகளையும் மாமன்றத்தில் கொண்டுவந்ததும் இல்லை.

கருணாநிதி ஒரே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். 1996-க்குப் பிறகு கருணாநிதி மத்திய அரசில் பங்கெடுப்பதை அட்சய பாத்திரத்தைக் கைப்பற்றுவதாகவே கருதினார். அப்படியே செயல்பட்டார்.

காங்கிரஸ் இட ஒதுக்கீடு விஷயங்களில் என்ன சாதித்தது? ஓபிசி இட ஒதுக்கீடு ஏன் இத்தனை ஆண்டு காலம் தாமதம் ஆனது? இந்தியாவை நேரிடையாகவும் மறைமுகமாகவும் அரை நூற்றாண்டு காலம் ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக 17 ஆண்டுகள் அதிகாரத்தைச் சுவைத்து தமிழகம் என்ன பெருமை அடைந்தது?

அடுத்த 100 ஆண்டுகள் இந்தியர்கள் மனத்தில் மோடி

இந்தியர்கள் 'பொது சுகாதாரம்' என்ற சொல்லையே 2014 மோடி ஆட்சிக்கு வந்த பின்புதானே உணரத் தொடங்கினார்கள். உங்களுக்கு கும்மிடிப்பூண்டி தாண்டி என்ன நடக்கின்றது என்பதே தெரியாது? காரணம் மொழி அரசியல், பிரதேச அரசியல். சமூக நீதி என்ற பெயரில் சாதீய அரசியல் என்று தமிழர்களை எக்காரணம் கொண்டு வளர்ந்துவிடவே கூடாது என்று திட்டமிட்டுத் திருட்டுத்தனம் செய்துகொண்டிருப்பது இனியும் நடக்காது. நடக்கவும்விட மாட்டோம்.

கருணாநிதி இருந்தவரை சமூகநீதிக் காவலராக வேடம் தரித்துப் பொய்யும் புனைச் சுருட்டுமாக கதை வசனம் எழுதி தமிழர்களை நம்பவைத்துக் கொண்டிருந்ததை இன்று நீங்கள் கையில் எடுத்திருப்பது வருத்தமாக உள்ளது. 'காலத்திற்குத் தேவைப்படாத அனைத்தும் காலாவதியாகிப் போகும்' என்பதனை அறியாதவரா நீங்கள்?

ஆர்ப்பாட்டம் இல்லாமல், அவசரப்படாமல், பாரபட்சமின்றி, மத பாகுபாடின்றி உள்கட்டமைப்பு வசதிகள் முதல் சமூக நீதிக்கான அடித்தளம் வரை அனைத்தையும் கடந்த ஏழு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக வடிவமைத்த மோடியை அடுத்த 100 ஆண்டுகள் இந்தியர்கள் தங்கள் மனத்தில் வைத்திருப்பார்கள்.

மகனின் பட்டாபிஷேகமும், தேசிய தலைவர்களும்

இதுவே இன்று எதிர்க்கட்சியினருக்கு உறுத்தலாக உள்ளது. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் இந்தியாவைப் பின்னுக்கு இழுக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றார்கள்.

ஒவ்வொருவரும் பிரதமர் கனவில் மிதக்கின்றார்கள். வடக்கே ராகுல், மேற்கே மம்தா பானர்ஜி, தெற்கே ஸ்டாலின். இப்படித்தான் முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் அவர்களும் ஒரு காலத்தில் பிரதமர் பதவிக்குப் போட்டிப்போட்டுக் கொண்டிருந்தார்கள்? இன்று அவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனை என்ன? இரண்டு குடும்பத்திலிருந்தும் அவரவர் வாரிசுகள்தாம் அரசியலுக்கு வந்துள்ளனர்.

இங்கே கருணாநிதிக்குப் பின்னால் ஸ்டாலின், இவருக்குப் பின்னால் உதயநிதி என்ற படிக்கட்டுபோல மக்கள் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நீங்கள்தான் இன்று சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றீர்கள்? உங்கள் மகன் பட்டாபிஷேகத்திற்காகக் காத்திருப்பதுபோலக் கடிதம் எழுதிய 37 தேசியத் தலைவர்களின் குடும்பம்தான் அந்தந்த மாநில அரசியலைத் தீர்மானிக்கின்றன. இதன் காரணமாகவே அந்தந்த மாநில மக்களால் தூக்கி எறியப்பட்டு இன்று அரசியல் அநாதை ஆகியுள்ளனர்.

திமுகவின் அதீத விசுவாசமுள்ள பத்திரிகைகள்

நீங்கள் தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய பணி ஏராளமாக உள்ளன. ஏனிந்த நாடகம்? ஆட்சிக்கு வந்து நாற்பது வாரங்கள் முடியப் போகின்றது? என்ன சாதித்துள்ளீர்கள்? கமிஷன், கரப்சன், கலெக்சன் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஒப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.

இன்று தமிழ்நாட்டில் ஊழல் என்பது எல்லை மீறிச் சென்றுகொண்டே இருக்கின்றது. திறமையான அலுவலர்கள் என்று தன்னைச் சுற்றி ஒரு பிம்ப மயக்கத்தை உருவாக்கி இன்று 'அனைவருக்கும் பங்கு' என்று மாற்றிய பெருமை உங்களையே சேரும். நீங்கள்தாம் இன்று அனைவருக்கும் 'சம உரிமை' என்று கடிதம் வழியாக வசனம் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

கடந்த சில மாதங்களாக திமுகவிற்கு அதீத விசுவாசத்தோடு இருக்கும் சில பத்திரிகைகள் ஒரு செய்தியை வெவ்வேறுவிதமான சொற்கள் கொண்டு மாற்றி மாற்றி எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

மற்றொரு காட்சி சமூக நீதி கூட்டமைப்பு

அதன் சாத்தியக்கூறுகள், யதார்த்தம், உண்மை போன்ற எதையும் மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக திரைப்பட வசனம் போலவே தலைப்புச் செய்திகளாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். 'வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரப்புவார்'.

இதன் நேரிடையான அர்த்தம் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேரும். இங்கு ஊடகங்களின் மூலம் உருவாக்கப்படும் ஆச்சரியங்கள் ஒன்று இரண்டல்ல. 'ஸ்டாலின் வரப் போகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை ஏற்று வழிகாட்டத் தயாராக இருக்கின்றார்' என்பதாகவே செய்திகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவருகின்றன.

இப்போது அதன் தொடர்ச்சியாக மற்றொரு காட்சி. 'சமூக நீதி கூட்டமைப்பு'. கருணாநிதி அரசியல் என்பது ஆட்சியில் இருந்தால் பேசுவது ஒன்று. எதிர்க்கட்சியாக இருந்தால் நடந்துகொள்வது வேறு. கச்சிதமாக அப்பாவைப் போலவே நீங்களும் அந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.

உங்கள் தமையன் சொன்ன ரகசியம் இனியாவது வெளியே வருமா?

குடும்பக் கட்சியாகவும், மாவட்டங்களைக் குறுநிலங்களாகப் பிரித்து பரம்பரையாக ஆளும் மாவட்டச் செயலாளர்களையும் கொண்ட திமுக சமூகநீதி பற்றிப் பேசுவதே பெரும் நகைச்சுவை. ஸ்டாலின் கடிதம் எழுதிய கட்சியினர் அந்தந்த மாநிலங்களை ஆண்ட காலத்தையும் மோடி ஆண்ட காலத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் கடந்த ஏழு ஆண்டுகளில்தான் கழிப்பறை, குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றுசேர்ந்துள்ளன. இதுதான் அனைவருக்குமான சமூகநீதியே தவிர திமுகவின் சாதிப்பிரிவினை அரசியல் அல்ல.

மன்னிக்கவும்.

இது 1996 அல்ல; 2022. புதிய நாடாளுமன்றம், புதிய தொழில்நுட்பக் காலம் என்று நரேந்திர மோடியின் உழைப்பால் இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் பொதுவான இந்தியா. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதனை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றோம்.

புது சுவாசத்தில் நான் இந்தியன் என்ற தேசிய சிந்தனையின் அடித்தளம் வலிமையடைந்துள்ளது என்பதனை பாஜகவின் அடிமட்டத் தொண்டன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆட்சியை நடத்தத் தெரியாதவர்கள் நீண்ட நாள்களுக்குக் காரணம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. நீட் குறித்து திமுக உருவாக்கிய நாடகம் இன்று ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பியதோடு உங்கள் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. உங்கள் தமையன் சொன்ன ரகசியம் இனியாவது வெளியே வருமா? அடுத்த வேடத்தை அணியத் தொடங்கியிருக்கிறீர்கள்.

இதையும் படிங்க: இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா? - ஸ்டாலினிடம் ஓபிஸ் கேள்வி

Last Updated :Feb 4, 2022, 2:38 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.