ETV Bharat / city

"அதிமுகவை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு!"

author img

By

Published : Mar 15, 2022, 3:29 PM IST

Updated : Mar 15, 2022, 7:06 PM IST

அதிமுகவை பழிவாங்கும் நோக்கில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் தொடர் சோதனை நடத்தப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு!
அதிமுகவை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு!

சென்னை: அதிமுக நிர்வாகிகள் வீட்டில் தொடர் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களுக்குத் தொண்டாற்றுவதிலும், அரசியல் பணிகளிலும், அதிமுகவின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் முன் நிற்க இயலாத திமுக அரசு, தனது தோல்விகளை மறைக்க, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது மீண்டும் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதிமுக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புச்சோதனை என்ற பெயரில் களங்கத்தை அள்ளி வீசும் கண்ணியக் குறைவான நடவடிக்கையில் இறங்கிய திமுக அரசு, மீண்டும் வேலுமணியைக் குறிவைத்தும், சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராம் உள்ளிட்டோரைக் குறிவைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கிறது.

திமுக அரசின் உள்நோக்கம்

இந்த முறையற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். திமுக அரசின் உள்நோக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில், கோவை மாவட்டத்தில் அன்புச்சகோதரர் வேலுமணி துடிப்புடன் செயல்பட்டு கழகப்பணிகள் ஆற்றியதை பொறுத்துக்கொள்ள இயலாமல், தற்போது அவர்மீது குறிவைத்துத் தாக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்களில் திமுகவினரின் ஆள்தூக்கி நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும், வீரத்துடன் எதிர்த்துப் போராடிய வேலுமணியை முடக்கிப் போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் இன்று(மார்ச் 15) லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் நன்கு அறிவார்கள்.

திமுகவின் தீய முயற்சிகளை முறியடிப்போம்...

சகோதரர் வேலுமணி அவர்கள் ஆயிரம் சோதனைகள் வந்தபோதும், அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர். அதிமுகவின் உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவரான வேலுமணி, திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளால் சிறிதும் தொய்வடைந்துவிடமாட்டார்; அவருடைய கழகப் பணிகளும், மக்கள் தொண்டும் தொய்வில்லாமல் தொடரும் என்பதை கழகத் தொண்டர்களும், கோவை மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள்.

திமுக அரசின் தீய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து, அதிமுக சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது; இனியும் விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்' என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'நாவரசு கொலை வழக்கு - முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் ஜான் டேவிட் மனு தள்ளுபடி'

Last Updated :Mar 15, 2022, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.