ETV Bharat / city

முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் கைது

author img

By

Published : Mar 4, 2022, 10:52 PM IST

அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்று பல கோடி மோசடி செய்ததாக இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் அகமது புகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Enforcement Departmen
அகமது புகாரி

சென்னை: இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 487 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்து குற்றத்தில் ஈடுபட்டதாக வருவாய் புலனாய்வு இயக்ககம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதற்காக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய அனல்மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடி ரூபாய் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சம்பாதித்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்து, அதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர். புகாரியை தற்போது அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

அகமது புகாரி சொந்தமாக தூத்துக்குடியில் முத்தியரா மின் நிலையத்தை உருவாக்கி மின் உற்பத்தி செய்து வருகின்றார். தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் 10 விழுக்காடு இந்நிறுவனம் விநியோகம் செய்து வருகின்றது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உலக முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்வதாக அகமது புகாரி நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னிலை நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் அகமது புகாரி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹெராயின் எனக்கூறி யூரியாவை விற்க முயன்ற நான்கு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.