ETV Bharat / city

ப.சிதம்பரம் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்!

author img

By

Published : Jun 1, 2022, 6:30 PM IST

மாநிலங்களவைத் தேர்தலில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் உட்பட திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 MP CONFIRMED AS MP
6 MP CONFIRMED AS MP

தமிழ்நாட்டில் வெற்றிடமாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் மே 31ஆம் தேதி 3 மணியுடன் நிறைவுபெற்றது.

இதில் திமுக சார்பாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர். இதேபோல அதிமுக சார்பாக சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், சுயேச்சைகள் 7 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 7 பேரும் என மொத்தம் 13 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான ஆய்வானது, தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆய்வுக்குப் பின் கீழ்க்கண்ட 6 வேட்பாளர்கள் அளித்த 11 வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் அறிவித்தார். அதன்படி

1. சு. கல்யாணசுந்தரம், திமுக

2. இரா. கிரிராஜன், திமுக

3. சி.வி. சண்முகம், அஇஅதிமுக

4. ப. சிதம்பரம், இதேகா

5. R. தர்மர், அஇஅதிமுக

6. கே.ஆர்.என். ராஜேஷ்குமார், திமுக - ஆகியோரின் மனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஆறுபேரும் தேர்வாவது உறுதியாகியுள்ளது.

மேலும், 7 சுயேச்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதாவது, அக்னி ஸ்ரீராமச்சந்திரன், ரெ.கந்தசாமி, க. சுந்தரமூர்த்தி, S. தேவராஜன், டாக்டர் கு. பத்மராஜன், மா. மன்மதன், த.நா. வேல்முருகன் சோழகனார் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

முன்னதாக, மாநிலங்களவை இடங்களுக்குப் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உறுப்பினர்கள் முன்மொழியாமல் தாக்கல் செய்த சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் பரிசிலீனையின்போது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவு!


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.