புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசு வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் செல்லும் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களால் கரோனா பரவாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், பாரபட்சம் காட்டி தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தடை செய்து அவர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு விழாவில் எதிர்க்கட்சிகளை சாடி அரசியல் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. மரபை மீறியது.
அதிமுக பாஜக கூட்டணி அமைத்திருப்பது திமுக கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. முதலமைச்சர் பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் பலம் குறித்து காங்கிரஸ் சார்பில் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது மூன்றாவது அணி நான்காவது அணி உருவாவது சகஜம் தான்.
ஆனால், போட்டி என்பது திமுக காங்கிரஸ் கூட்டணி அதிமுக பாஜக கூட்டணி இடையே மட்டும் தான். தமிழ்நாட்டில் சாதி, மதம் ஆகியவற்றை பார்த்து யாரும் வாக்களிப்பது கிடையாது” என்றார்.
மேலும், “லஷ்மி விலாஸ் வங்கியை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.