ETV Bharat / briefs

சென்னை இசைக்கலைஞர்கள் தொடுத்த வழக்கு: உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு

author img

By

Published : Jun 29, 2020, 1:37 PM IST

சென்னை: கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள இசைக் கலைஞர்களுக்குத் தனி நல வாரியம் அமைத்து நிவாரண உதவி வழங்கக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Musicians case filed
Musicians case filed

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோயில்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மங்கள இசைக் கருவிகளை வாசிக்கும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானமின்றி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது போல நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் எனத் தனித்தனியாக நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ் நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு என தனி நலவாரியம் ஏற்கனவே உள்ளது எனவும், பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி கோரி ஏற்கனவே ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஜூலை 1ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து, இதேபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட பழைய வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் ஜூலை 1ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.