கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). திருமணமாகாதவர். இவரும், இவரது நண்பருமான கிரிராஜூம் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இருவரும் வீடு ஒன்றில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு, இருவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது சக்திவேல் கிரிராஜூவிடம் ஊதியத்தை கேட்டுள்ளார். இதற்கு கிரிராஜ் தர முடியாது என்று மறுத்ததோடு அதிகாரமாக பேசியதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் கிடந்த கடப்பாரையைக் கொண்டு கிரிராஜை பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கிரிராஜ், கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல் துறையினர் சக்திவேலை கைதுசெய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு, கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.