ETV Bharat / bharat

ஓடும் காரில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. ஆண் நண்பருடன் பூங்காவுக்கு சென்றபோது நேர்ந்த கொடூரம்..

author img

By

Published : Mar 31, 2023, 5:31 PM IST

பெங்களூருவில் ஓடும் காரில் வைத்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓடும் காரில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு
ஓடும் காரில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கோரமங்களா என்னும் பகுதியில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 4 பேரை போலீசார் இன்று (மார்ச் 31) கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மார்ச் 25 ஆம் தேதி நடந்துள்ளது. இது குறித்து கோரமங்களா போலீசார் கூறுகையில், "கோரமங்களாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள விளையாட்டு பூங்காவில் மார்ச் 25 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இரவு 10 அளவில் அந்த பூங்காவுக்கு நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று காரில் வந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் அந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். இதனால் அந்த கும்பலுக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த ஆண் நண்பரை நான்கு பேரும் அடித்தும், மிரட்டல் விடுத்தும் அங்கிருந்து விரட்டி உள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் தள்ளி அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்த கார் தொம்மாலூர், இந்திரா நகர், ஆனேக்கல், நைஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக சுற்றியுள்ளது. இந்த நேரத்தில் அந்த பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இறுதியாக, அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே சாலையில் விட்டுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணை சக தோழிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பின் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரின் எண்ணை கண்டறிந்தோம். அதன் பின் 4 பேரையும் இன்று (மார்ச் 31) கைது செய்தோம்.

இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். அதன் பின் குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலம் மைசூருவில் இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

அதோடு அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பெண் சாமுண்டி மலைப்பகுதிக்கு அருகே உள்ள ஹெலிபேட் பகுதி வழியாக தனது ஆண் நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அங்கே வந்த கும்பல் இவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இவர்களிடம் பணம் இல்லாததால் அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.