ETV Bharat / bharat

"3 வருடமாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்?" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 4:55 PM IST

What was the governor doing for 3 years SC? மசோதாக்கள் குறித்து விரைந்து முடிவுகள் எடுக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் தமிழக ஆளுநர் மூன்று வருடங்களாக என்ன செய்து கொண்டு இருந்தார் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

what-was-the-governor-doing-for-three-years-sc-on-delay-by-tamil-nadu-governor-on-pending-bills
3 வருடம் தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி...

டெல்லி: தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க காலம் தாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தாக்கல் செய்தது.

அதில், "தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிப் பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதில், குறிப்பாகத் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்து இருக்கும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றும் விசாரணைக்கான அனுமதி, பல வருடங்களாகச் சிறையில் இருக்கும் கைதிகளில் முன்கூட்டி விடுதலை செய்வது, தினசரி மனுக்கள், பணி நியமன ஆணைகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவது போன்று 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை 12 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், பல மாதங்களாக இவை நிலுவையில் உள்ளன. இதனால் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பதை மிக முக்கிய பிரச்சனையாகப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, வழக்கு குறித்து மத்திய அரசிற்கு நோட்டீஸ் வழங்கி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (நவ. 20) மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது நீதிபதிகள், ஜனவரி 2020ஆம் ஆண்டிலிருந்து மசோதாக்களுக்குப் பதிலளிக்காமல், தற்போது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்பு ஆளுநர் முடிவு எடுத்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதற்காக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் காத்திருந்தார் என்றும் மூன்று வருடங்களாக ஆளுநர் என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு தரப்பில், ஆளுநர் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் அல்ல மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனத்தில் சில பிரச்சனைகள் உள்ளது எனவே அந்த மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அனுப்பிய 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், 5 மசோதாக்கள் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று உள்ளதாகவும், 9 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் மற்றும் 5 மசோதாக்கள் அக்டோபர் 2023ஆம் ஆண்டு தான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நவம்பர் 2021 முதல் பதவி ஏற்றுள்ளார். ஆனால் 10 மசோதாக்கள் ஜனவரி 2020 அனுப்பப்பட்ட பழைய மசோதாக்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி, இந்த பிரச்சினை எந்த தனிப்பட்ட ஆளுநர் பற்றியது இல்லை மசோதாக்கள் கால தாமதம் குறித்தது எனத் தெரிவித்தார்.

தமிழ் நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான ஏ.எம்.சிங்வி, பி.வில்சன் மற்றும் முகுல் ரோகத்கி ஆகியோர் ஆஜராகினர். மொத்தமாக ஆளுநர் ஒப்புதல் பெறாமல் 15 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், மேலும் ஆளுநர் மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் போது அதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அது நிதி மசோதாவிற்கு நிகரானதாக மாறிவிடும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு தரப்பில், நிலுவையிலுள்ள மசோதாக்கள் குறித்து முடிவுகள் எடுக்கக் கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு சிறை உறுதி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.