ETV Bharat / bharat

இந்துக்களுக்கு எதிரானது பாஜக.. பாஜக அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழப்பு.. பிரதமர் பதவி விலக திருமாவளவன் கோரிக்கை!

author img

By

Published : Aug 8, 2023, 7:14 PM IST

பாஜக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டதாகவும், பிரதமர் மோடி தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் தெரிவித்தார்.

Thirumavalavan
Thirumavalavan

இந்துக்களுக்கு எதிரானது பாஜக.. பாஜக அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழப்பு.. பிரதமர் பதவி விலக திருமாவளவன் கோரிக்கை!

டெல்லி : எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. திருமாவளவன், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் சார்பில் தான் மணிப்பூருக்குச் சென்ற போது, நிவாரண முகாம்களில் உள்ள மெய்தி மற்றும் குக்கி இன மக்களை சந்தித்ததாகவும், அப்போது அவர்கள் மணிப்பூர் அரசு மட்டுமின்றி, மத்திய அரசின் மீதான நம்பிக்கையையும் தாங்கள் இழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறினார்.

குக்கி தரப்பு மட்டுமின்றி மெய்தி என இருதரப்பிலும் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்; மணிப்பூர் முதலமைச்சர் தங்களை சந்தித்து ஆறுதல் கூட கூறிவில்லை என இரு தரப்பு மக்களும் வேதனைத் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். 90 நாட்களாக நடந்த கலவரச் சம்பவங்கள், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்ணின் மைந்தர்கள் சொந்த மண்ணிலே அகதிகளைப் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக திருமாவளவன் மக்களவையில் எடுத்துரைத்தார்.

90 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் மணிப்பூர் கலவரத்திற்குப் பிரதமர் மோடி ஒரு வரியில் இது கண்டிக்கத்தக்கது என்று கூறியதாகவும்; இந்த அரசின் மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் இழந்துவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மணிப்பூர் மக்களைப் போலவே எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்து இருப்பதாகக் கூறினார்.

கார்கில் போரில் கலந்து கொண்ட ராணுவ வீரர், மணிப்பூர் கலவரத்தில் மானபங்கப்படுத்தப்பட்ட தன் மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போனதாகக் கூறியது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். சொந்த மண்ணிலேயே இந்த மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக வாழும் சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும்; பெண்களை நிர்வாணப்படுத்தி மிகக் கேவலமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அவைக்கு பிரதமர் மோடி வர வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும்; அரியானாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடுவதாகவும் குறிப்பிட்டார். சங் பரிவார், பஜரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக திருமாவளவன் கூறினார்.

மேலும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வால் இந்த அரசு, சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பெரும்பான்மையான இந்து மக்களுக்கும் எதிராக உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். இந்து பெரும்பான்மை மக்களுக்கு பாஜக அரசு எதிராக இருப்பதால், கர்நாடகாவில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்களே பாஜகவை வீழ்த்தி விட்டு காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தியதாக அவர் எடுத்துரைத்தார்.

அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை இழந்து இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது என்றும்; பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். எஸ்.இ., எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படவில்லை என்றும், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

பாஜக அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வரவேற்பதாக கூறிய திருமாவளவன், அரசின் மீதான நம்பிக்கையின்மைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் என்னென்ன வசதிகள் தெரியுமா?

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.