ETV Bharat / bharat

ஒடிசா அமைச்சர் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

author img

By

Published : Jan 30, 2023, 8:56 AM IST

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மறைவையொட்டி ஒடிசா மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஒடிசா அமைச்சர் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
ஒடிசா அமைச்சர் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

ஜார்சுகுடா: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜ்ராஜ் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதன்பின் அவர் முதலுதவி சிகிச்சைக்காக ஜார்சுகுடா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் புவனேஸ்வரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (ஜன.29) மாலை, அமைச்சர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து அவரது உடல் கேப்பிட்டல் மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. பின் நபா தாஸின் உடல் சட்டமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு சபாநாயகர் விக்ரம் கேஷரி அரூக், துணை சபாநாயகர் ரஜினிகாந்த் சிங், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து நபா தாஸின் உடல், புவனேஸ்வரில் உள்ள அவரது அரசு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று காலை (ஜன.30) 8 மணிக்கு மேல் மாநில பிஜூ ஜனதா தளம் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவர்.

பின்னர் 9 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நபா தாஸின் உடல், அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செயவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், அமைச்சர் நபா தாஸின் மறைவை முன்னிட்டு, ஒடிசாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய 3 நாட்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். முக்கியமாக உடல் தகனம் செய்யும் இடத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் அரசு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு ஜார்சுகுடாவில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய துணை காவல் ஆய்வாளர் கோபால் தாஸ், கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.