ETV Bharat / bharat

சிக்கினால் ரூ.500 கோடி அபராதம் - நாளை தாக்கலாகிறது டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா..! சிறப்பம்சங்கள் என்ன?

author img

By

Published : Aug 2, 2023, 8:04 PM IST

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது தனிநபர் தரவுகளை விதிகளை மீறி பயன்படுத்தினால் 500 கோடி ரூபாய் அபராதம் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது
டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது

புதுதில்லி: மக்களவையில் நாளை (03.08.2023) நடைபெற உள்ள நிகழ்வுகளுக்கான பட்டியலில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (The Digital Personal Data Protection Bill, 2023) உள்ளது. இந்த மசோதா கடந்த ஜூலை 5ம் தேதி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருந்தது.

டிஜிட்டல் இயங்குதளங்களில் சட்டத்திற்குட்பட்டு தனிநபர் தகவல்களை பயன்படுத்த அனுமதி அளிக்கும் அதே நேரத்தில் தனிநபரின் தரவுகள் மீதான அவரது உரிமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவரின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் ரூ.500 கோடி வரையிலும் அபராதம் விதிக்கப்படவும் இம்மசோதாவில் சட்டவாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தனிநபர் தகவல்கள் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்ப்படுவதை இந்த சட்ட மசோதா கட்டுப்படுத்தும். நேரடியாக சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்களும் பின்னாளில் டிஜிட்டல் மயமாக்கப்படும் போது, அதுவும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வழிவகை உள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள நபர்களின் தகவல்கள் வெளிநாடுகளில் சேகரிக்கப்படுவதற்கும், நிர்வகிக்கப்படுவதற்கும் சட்ட மசோதாவில் கட்டுப்பாடுகள் உள்ளன.

இம்மசோதாவில் உள்ள அம்சங்கள் முறையாக செயலாக்கம் பெறுவதை உறுதி செய்யும் விதமாக, தரவு பாதுகாப்பு வாரியம் ஒன்று உருவாக்கப்படும். இந்த அமைப்பு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்யும் வகையில் செயலாற்றும் என தேரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் உங்களின் கணக்கை நீங்கள் நீக்கினால், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அதனை முழுமையாக நீக்கம் (Delete) செய்துவிட வேண்டும். சமூகவலைத்தள பயனாளர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை மாற்றுவதற்கும் , அழிப்பதற்கும் முழுமையான உரிமையை இந்த மசோதா வழங்குகிறது.

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என கருதப்படும் எந்த தரவுகளையும் சேகரிக்க பெற்றோரின் அனுமதி கண்டிப்பாக தேவை. குழந்தைகளின் தரவுகள் பின்தொடரப்படுவதில்லை என்பதை சமூகவலைத்தள நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதே போன்று தனியார் நிறுவனங்கள் வருகைப்பதிவுக்காக ஊழியரின் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளை சேகரித்தால் அதற்காக ஊழியரின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். எந்த நிறுவனம் தங்களின் தரவுகளை பயன்படுத்துகிறது என்பதை பயனாளர் தெரிந்து கொள்ள முடியும்.

விவாதத்திற்குள்ளாகியிருக்கும் இந்த மசோதா, தனிநபர் தரவுகள் பாதுகாப்புக்காக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இரண்டாவது முயற்சியாகும். ஏற்கெனவே 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2019 கடந்த ஆகஸ்ட் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் வழங்கியதைத் தொடர்ந்து புதிய மசோதா தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த நடிகர் விஜயின் அம்மா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.