ETV Bharat / bharat

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகன்; கூலிப்படை வைத்து கொலை செய்த பெற்றோர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 11:04 PM IST

மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனது மகனைப் பெற்றோரே ரூ.3 லட்சம் கொடுத்து கூலிப் படையினரை விட்டு படுகொலை செய்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

பத்ராசலம்(தெலங்கானா): நீண்ட நாட்களாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிய இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் வார்த்தைகளைக் கேட்காமல் இருந்து வந்துள்ளார். தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்கும்படியும் அந்த இளைஞர் பெற்றோரை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆந்திரா - தெலங்கனா மாநில எல்லையில் உள்ள அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் எடப்பாகா பகுதியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து எடப்பாகா காவல்நிலையத்தில் ரம்பசோடவரம் ஓஎஸ்டி கே.வி.மகேஸ்வர ரெட்டி இன்று (செப்.26) செய்தியாளர்களிடம் கூறுகையில், “தெலுங்கானா மாநிலம் பத்ராசலம் மெடிக்கல் காலனியில் வசிக்கும் பகில்லா ராமு (57) - சாவித்ரி (55) தம்பதியின் மகன் துர்காபிரசாத் (35) என்பவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்தாருடன் சண்டை போடுவது வழக்கம்.

இவரது நடத்தையால் விரக்தியடைந்த அவரது மனைவி மௌனிகா அவருடன் இணைந்து வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனால், இதன் பிறகும் தனது மதுப்பழக்கத்தைக் கைவிடாத துர்காபிரசாத், பல நாட்களாக வீட்டை விற்கும்படி பெற்றோரைச் சித்ரவதை செய்து வந்துள்ளார். இவரின் தொந்தரவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவரது குடும்பத்தினர் பத்ராசலத்தைச் சேர்ந்த கும்மாடி ராஜு (33), ஷேக் அலி பாஷா (32) ஆகியோரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்து மகன் துர்கா பிரசாத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

பின்னர், திட்டப்படி கடந்த 9-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த துர்கா பிரசாத்தைக் கூலிப் படையினர் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் இணைந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். தொடர்ந்து சடலத்தை ஆட்டோவில் கொண்டுப் போய், தும்மலாநகர் காட்டுப் பகுதிக்குள் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

கடந்த 10-ஆம் தேதி வனப்பகுதிக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் இது குறித்து விசாரணையைத் தொடங்கினர். போலீசாரின் விசாரணையின் ஒருபகுதியாக, சடலமாக இருந்தவர் தனது கணவர்தான் என்று அவரின் மனைவி அடையாளம் கண்டு கூறியதைத் தொடர்ந்து, விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, அவரது பெற்றோர் மற்றும் கூலிப்படையினர் இருவர் என நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறைகளைத் தடுக்க ஆசிரியர்கள் கருத்துகள் தெரிவிக்க அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.