ETV Bharat / bharat

பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது - உச்ச நீதிமன்றம்

author img

By

Published : Jul 27, 2022, 4:47 PM IST

பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் சோதனை, கைது, பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Supreme Court
Supreme Court

டெல்லி: பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ல் உள்ள பிரிவு 3, பிரிவு 45 உள்ளிட்டவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறைக்கு கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அதிகாரம் வழங்குவதை எதிர்த்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உரிய ஆதாரங்களை காண்பிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்குவது, இந்திய அரசியல்சாசனத்திற்கு எதிரானது என மனுதாரர்கள் குறிப்பிட்டனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பணமோசடி தடுப்பு சட்டம் என்பது சாதாரண பண மோசடி வழக்குகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படவில்லை, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. பணமோசடி தடுப்பு சட்டம் 2002-ல் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்வது, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் " என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், "பணமோசடியில் ஈடுபட்டவர்களை அமலாக்கத்துறையினர் கைது செய்வது என்பது தன்னிச்சையான நடவடிக்கை இல்லை. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்யவும், கைது செய்யவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.

முறைகேடு புகார்கள் தொடர்பாக தகவல்களை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் செல்லுபடியாகும். அதேபோல், 2002-க்கு முன்பு நடந்த பண மோசடி புகார்களிலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க அனுமதி உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருநங்கைகள் பைலட் உரிமம் பெற மருத்துவ பரிசோதனை தடையாக இருக்காது - அமைச்சர் விகே சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.