ETV Bharat / bharat

பணக்கார கிரிக்கெட் வீரர் யார்? டோனியா.. கோலியா.. இல்ல சச்சினா..? யார் தெரியுமா?

author img

By

Published : Jul 8, 2023, 6:31 PM IST

நாட்டில் பணக்கார கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை குஜராத் மாநிலத்தை ரஞ்சி கிரிக்கெட் வீரர் சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட் பெற்று உள்ளார். அவரது சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளது.

Cricketer
Cricketer

ஐதராபாத் : சர்வதேச அளவில் பணம் கொழிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகம் என்பது வயது வரம்பின்றி சிறு வயது முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் காணப்படுகிறது. அப்படி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் விளையாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் விளையாடும் வீரர், வீராங்கனைகள் ஒரு அள்ளு அள்ளி விடுகின்றனர்.

போட்டிக் கட்டணம், வருடாந்திர ஒப்பந்தங்கள், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்கள் என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிகப் பெரிய பணத்தை சம்பாதிக்கின்றனர். குறிப்பாக நட்சத்திர வீரர்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வருவாயாக ஈட்டி வருகின்றனர்.

ஏன், சில விநாடிகளே ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் கூட நடிப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் அதிகபட்ச சொத்து மதிப்புகளை கொண்டு இருக்கும் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால், ஊர் அறிந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் மட்டுமே அனைவரின் காதுகளில் ஒலிக்கும் பெயராக வந்து விழும்.

அப்படி பார்க்கையில் புகழ் பெற்ற வீரர்களையே பின்னுக்குத் தள்ளி, சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமலும், ஏன் ஐ.பி.எல் தொடர் ஒரு போட்டியில் கூட களமிறங்காத வீரர் ஒருவர் இந்திய பணக்கார கிரிக்கெட் வீர்ர்களின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து உள்ளார் என்றால் அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும், இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரை, சச்சின், தோனி மற்றும் கோலியை விட ஒரு கிரிக்கெட் வீரருக்கு அதிக சொத்து உள்ளது. அவர் தான்.. குஜராத் மாநிலம் பரோடா சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட். முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர். இவர் தான் நாட்டின் பணக்கார கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை தன் வசம் வைத்து உள்ளார்.

முன்னணி வீரரான விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரின் சொத்து மதிப்பு ஆயிரம் 250 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் சொத்து மதிப்பு ஆயிரத்து 40 கோடி ரூபாயாகும்.

ஆனால் இவர்களை அனைவரின் சொத்து மதிப்பையும் ஒன்றிணைத்தால் கூட சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் சொத்து மதிப்புக்கு ஈடு கொடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட் வதோதரா மகாராஜா ரஞ்சித்சிங் பிரதாப் கெய்க்வாட் மற்றும் சுபாங்கினி ராஜே ஆகியோரின் ஒரே மகன். ஏப்ரல் 25, 1967 ஆம் ஆண்டு பிறந்த சமர்ஜித் டேராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் படித்தார். மே 2012 ஆம் ஆண்டு அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு சமர்ஜித் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார்.

அவர் உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை, மோதி பாக் ஸ்டேடியம் மற்றும் மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியகம் ஆகியவற்றின் உரிமையாளர் ஆவார். லட்சுமி விலாஸ் அரண்மனை அருகே 600 ஏக்கருக்கும் அதிகமான ரியல் எஸ்டேட் நிலம் அவர் பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மற்றும் பனாரஸில் உள்ள 17 கோயில்கள் மற்றும் அறக்கட்டளைகளை சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட் நிர்வகித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு வாங்கனேர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராதிகாராஜே என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட் 2017ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

சமர்ஜித்தின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் 1987 முதல் 1989 வரை ரஞ்சி டிராபியில் பரோடா அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடி 119 ரன்கள் எடுத்து உள்ளார். பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியையும் சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : "தெலங்கானாவில் ஊழல் தலை விரித்தாடுகிறது" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.