ETV Bharat / bharat

ஒடிசா ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாரணை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிந்துரை!

author img

By

Published : Jun 4, 2023, 7:45 PM IST

கோரமண்டல் விரைவு ரயில், யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட மூன்று ரயில் விபத்து சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிந்துரை செய்து உள்ளார்.

CBI
CBI

புவனேஷ்வர் : ஒடிசா மூன்று ரயில்கள் விபத்து சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மீது மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விழுந்த நிலையில் அதன் மீது மோதி யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து எற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

விரைவில் விபத்துக்கான முழு காரணம் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மூன்று ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாராணை நடத்த வேண்டும் எனக் கோரினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மூன்று ரயில்கள் விபத்து சம்பவத்தில் நிர்வாக தகவல்கள் உள்பட கிடைக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் கருத்தில் கொண்டு உள்ளதாகவும், எல்லாவற்றையும் பார்க்கையில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் பெருவாரியான அளவில் நிறைவு பெற்று விட்டதாகவும், வயரிங் உள்ளிட்ட பணிகள் மட்டும் மீதமுள்ளதாகவும் அதுவும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். முன்னதாக ஒடிசா விபத்துக்கான மூலக் காரணம் மற்றும் அதற்கு காரணமான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மற்றும் பாயிண்ட் மெஷினில் செய்யப்பட்ட மாற்றத்தால் விபத்து நடந்ததாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார்.

மூன்று ரயில்கள் விபத்து குறித்த விசாரணையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நிறைவு செய்ததாகவும், அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

அதேநேரம், இந்த ரயில்கள் விபத்து சம்பவத்தில் உயிர் பிழைத்த கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநர், கிரின் சிக்னல் கிடைத்த பின்னரே ரயிலை இயக்கியதாக தெரிவித்ததாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்து உள்ளார். மேலும் சரக்கு ரயிலில் இரும்பு பாரம் ஏற்றப்பட்டு இருந்ததாகவும் அதனால் தான் கோரமண்டல் விரைவு ரயில் மோதிய போதும் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரளவில்லை என்றும் தெரிவித்தார். அதுவே கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரளவும், அதிகளவிலான உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்படவும் காரணம் என அவர் கூறினார்.

இதையும் படிங்க : "கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே ரயிலை இயக்கினேன்" - கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.