ETV Bharat / bharat

இந்திரா முதல் ஜெயலலிதா வரை - ராகுலுக்கு முன்பே தகுதி நீக்கம் ஆன தலைவர்கள்...

author img

By

Published : Mar 24, 2023, 8:21 PM IST

பிரதமர் மோடியை விமர்சித்த போது, வெளியிட்ட அவதூறு கருத்தால், 2 ஆண்டு சிறை தண்டனையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்திருக்கிறார் ராகுல் காந்தி. தகுதி நீக்கம் அரசியல் வாழ்வின் முடிவா? தகுதி நீக்கப்படும் முதல் அரசியல்வாதி ராகுல்காந்தியா ? அலசுகிறார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன்.

ராகுலுக்கு முன்பே தகுதி நீக்கம் ஆன தலைவர்கள்
ராகுலுக்கு முன்பே தகுதி நீக்கம் ஆன தலைவர்கள்

சென்னை: தனது அரசியல் வாழ்வில் இரண்டு முறை தகுதி இழப்பை சந்தித்தவர் ஜெயலலிதா, மாட்டுத்தீவன ஊழல் புகாரால் மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், இதே அவதூறு வழக்கில் சிக்கி 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இன்னும் வரலாற்றில் பின்னோக்கி சென்றால் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி கூட 1975 ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தான்.

இருந்தாலும் ஜெயலலிதாவின் வழக்குகள் தனித்துவமானவை, 1992 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போது அரசு பொதுத்துறை நிறுவனமான டான்சியின் நிலத்தை முறைகேடாக வாங்கியதாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டு 2000ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் ஏற்கெனவே 1996ம் ஆண்டு தேர்தலில் தோற்றிருந்த ஜெயலலிதாவுக்கு, 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

ஆனாலும் தேர்தலில் அதிமுக ஜெயித்தால் எம்எல்ஏவாக தேர்வாகாமலேயே முதலமைச்சரானார். இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் , ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சராக்கிவிட்டு பதவி விலகினார் ஜெயலலிதா. இதன் பின்னர் மூன்றே மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்ததால், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று முதலமைச்சரானார்.

வரலாறு மீண்டும் திரும்புவது போல சொத்துக்குவிப்பு வழக்கில் 2015ம் ஆண்டு மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்த போது முதலமைச்சராக இருந்தார் ஜெயலலிதா. அப்போதும் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்ததோடு சிறை செல்லவும் நேரிட்டது. இப்போதும் முதலமைச்சராகும் வாய்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு 2வது முறையாக கிடைத்தது. இருப்பினும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜான் மைக்கேல் டி குன்ஹ அளித்த தீர்ப்பை ரத்து செய்ததால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அப்போது எம்எல்ஏவாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து, எஸ்.வளர்மதி எம்எல்ஏவாக தேர்வாகிவிட்டார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் ஜெயலலிதா. இதே போல ராகுல் காந்தியும் மேல்முறையீடு செய்து தகுதி நீக்கத்திலிருந்தும், தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையிலிருந்தும் வெளி வரலாம். ஆனாலும், எம்.பி. பதவி திரும்ப கிடைக்குமா என்பது பெரிய கேள்வி தான். எனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுமா? என்றும் சில குரல்கள் எழுகின்றன.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் தான், சமீபத்தில் தகுதி நீக்கப்பட்ட லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் வழக்கு சுட்டிக்காட்டப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்றதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இவரது வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சென்று குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை பெற்றார். மேலும் உச்சநீதிமன்றம் வரை சென்று தான் மீண்டும் எம்.பி. ஆவதை உறுதி செய்தார். இடைப்பட்ட காலத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால் இதுவரையிலும் அவரை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவை மக்களவை செயலகம் ரத்து செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விஜயனை அணுகினோம், அவர் கூறியதன்படி, இந்தியாவில் அவதூறு வழக்குகள், குற்றவழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படுகிறது. மற்ற நாடுகளில், அவதூறு வழக்குகளில், மானநஷ்ட வழக்கு தொடுத்து, இழப்பீடு பெற மட்டுமே அனுமதிக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 3 - 8(3): எல்லா வழக்குகளிலும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றாலே தகுதி நீக்கம் செய்ய அனுமதி வழங்குகிறது. பிரிவு 8(4):ன்படி மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், தகுதிநீக்கம் செய்யமுடியாது. ஆனால், 2013ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒருவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக தகுதி நீக்கம் செய்யலாம் என உத்தரவிட்டது.

CRPC 199(2):ன் படி , அரசு வழக்கறிஞர் மட்டுமே அவதூறு வழக்குகளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யமுடியும். ஆனால், ராகுல் காந்தி வழக்கில், வேறு நபர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, தகுதி நீக்கத்திற்கு, உச்ச நீதிமன்றம் தடைவிதித்தால், ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினராக தொடரலாம். தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்வது போன்று, தகுதி நீக்கத்தையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்ட வாய்ப்பு இருக்கிறது என வழக்கறிஞர் விஜயன் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: "நாட்டு மக்களுக்காக எந்த விலையையும் கொடுக்க தயார்" - ராகுல்காந்தி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.