உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை பாஜக தொடங்கியுள்ளது.
நான்கு மாதத்திற்கு முன்னதாக அங்கு முதலமைச்சராக இருந்த தீர்த் சிங் ராவத்தை நீக்கிய பாஜக 45 வயதான இளந்தலைவர் புஷ்கர் சிங் தாமியை முதலமைச்சராக நியமித்தது. இவர் மாநில பாஜக இளைஞர் அணி தலைவராக இருந்தவர்.
புஷ்கர் ஆட்சிக்கு வந்து நான்கு மாதமே ஆகியுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் முகமாக யார் இருப்பார் என கேள்வி எழுந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இரு நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றிருந்தார். அப்போது கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், 2022 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சி அமைக்கும் சூழலில் அடுத்த முதலமைச்சராகவும் புஷ்கர் தாமியே தொடர்வார் என உறுதிபட கூறினார்.
இதையடுத்து புஷ்கர் தாமியையே முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் களம் காண பாஜக திட்டமிட்டுள்ளது தெரிகிறது.
இதையும் படிங்க: மோடிக்கு தினமும் பிறந்தநாள் வந்தால் மகிழ்ச்சி - ப. சிதம்பரத்தின் வஞ்சப்புகழ்ச்சி