ETV Bharat / bharat

'மாநிலங்களவையின் பணிகள் 70% அதிகரிப்பு' - வெங்கையா நாயுடு வழியனுப்பு விழாவில் பிரதமர்

author img

By

Published : Aug 8, 2022, 2:20 PM IST

வெங்கய்யா நாயுடு வழியனுப்பு விழாவில் பிரதமர்
வெங்கய்யா நாயுடு வழியனுப்பு விழாவில் பிரதமர்

வெங்கையா நாயுடுவின் தலைமையில் மாநிலங்களவையின் பணிகள் 70 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், அவை உறுப்பினர்களின் வருகையும் அதிகரித்திருப்பதாகவும் வழியனுப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லி: துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆக. 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய துணை குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள ஜகதீப் தன்கர், ஆக. 11ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடுவிற்கு வழியனுப்பு விழா இன்று (ஆக. 8) நடைபெற்றது.

வெங்கையா நாயுடுவின் கொள்கை: இதில், பிரதமர் மோடி உள்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் உரையாற்றினர். பிரதமர் மோடி பேசுகையில், "மாநிலங்களவை தலைவர் பொறுப்பை நிறைவு செய்யும் வெங்கையா நாயுடு, விவாதத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர். அதில், தரத்தையும், மரபையும் பின்பற்றும் அவரின் தனித்துவமான முறை, அடுத்து வருபவர்களுக்கு பயனளிக்கும்.

தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டைகட்டை போடுவது, அவையை அவமதிப்பது போன்றது என்பார் வெங்கையா நாயுடு. அவரின் கொள்கையே,'அரசு முன்மொழியட்டும், எதிர்கட்சிகள் எதிர்கட்டும், அவை முடிவெடுக்கட்டும்' என்பதுதான்.

ஆழமான ஒன்-லைனர்கள்: வெங்கய்யா நாயுடுவிடம் போற்றத்தக்க விஷயங்களில் ஒன்று, இந்திய மொழிகளின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம். அது இந்த அவையை அவர் தலைமை தாங்கிய விதத்தில் பிரதிபலித்தது. வெங்கையா நாயுடுவின் ஒன்-லைனர்கள் (ஒற்றை வரி வாசகம்) அவரின் புத்திக்கூர்மையை பறைசாற்றும்.

அவர் கூறுவதில் ஆழமும், பொருளும் நிறைந்திருக்கும். மேலும், அவரின் தலைமையில் மாநிலங்களவையின் பணிகள் 70 விழுக்காடு அதிகரித்துள்ளது, உறுப்பினர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. அவருடன் பணியாற்றிய இத்தனை ஆண்டுகளில், அவர் வெவ்வேறு பொறுப்புகளை ஏற்றதை பார்த்துள்ளேன்.

அவை அனைத்திலும் அவர் அர்பணிப்புடன் பணியாற்றினார். இளைஞர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அதிக திட்டங்களை அவர் முன்னெடுத்தார்" என்றார்.

தற்போதைய குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், மக்களவை சபாநாயகர், பிரதமர் என அனைவரும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவர்கள் என்றும் மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்த இவர்கள் முன்னிலையில் இந்தாண்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.