ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர், கடந்த சில நாள்களாக வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்று வரை 55 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 227ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோபரி தோட்டா, கோத்தாபேட்டா, தூர்பூ வீதி, அருந்ததி பெட்டா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இச்சம்பவத்தினைத் தொடர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், தற்போதுவரை 100 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் புதிய நோயைக் கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் களமிறங்கியுள்ளனர். மேலும், ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சர் அல்லா காளிகிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், சம்பவம் பற்றி அறிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைப் பார்வையிட்டார்.