ETV Bharat / bharat

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு - சிபிஐ விசாரணை!

author img

By

Published : Jul 27, 2023, 7:25 PM IST

Updated : Jul 27, 2023, 7:59 PM IST

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

CBI
CBI

டெல்லி : மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 160க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.

கடந்த மே மாதம் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதில் அந்த இரண்டு பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்திற்கு வெளியே சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மணிப்பூர் அரசு கோரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூர் விவவகாரம் தொடர்பாக அதன் அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தி, மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வழிவகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் வன்முறை மற்றும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இருப்பினும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. அதேபோல் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்களவை கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் இதனை நிராகரித்த எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென கோரி வருகின்றனர். இதனிடையே ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதித்த இடங்களை எதிர்க்கட்சி எம்.பிக்கள் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பயணத்தின் இடையே நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மாநிலத்தின் நிலவரம் குறித்து உரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : அத்திப்பட்டி போல் மாயமான 5 கிராமங்கள்.. வாக்குரிமை இருந்தும் நிர்கதியாய் நிற்கும் மக்கள்!

Last Updated :Jul 27, 2023, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.