ETV Bharat / bharat

என்எஸ்இ தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு... சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி...

author img

By

Published : Aug 29, 2022, 6:36 PM IST

பங்குச்சந்தை ஊழியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

nse
nse

டெல்லி: 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அலுவலராகப் பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா, பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் பங்குச்சந்தையின் முன்னாள் குழும அலுவலரான ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

பங்குச்சந்தையின் தகவல்களை சாமியார் ஒருவருடன் பகிர்ந்ததாகவும் புகார் எழுந்தது. பங்குச்சந்தை ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா மீது, கோ-லொக்கேஷன் உள்ளிட்டப் பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் மற்றொரு புகாரும் எழுந்தது.

கடந்த 2009 முதல் 2017 வரை, தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் அலுவலர்கள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகவும், இதன் மூலம் என்எஸ்இ-க்கு சுமார் நான்கரை கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக, சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன், மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன்கோரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று சிறப்பு நீதிபதி சுனேனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ராவுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கில் சஞ்சய் பாண்டேவின் ஜாமீன் மனுவையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார்... கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பேட்டி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.