ETV Bharat / bharat

நெல்லூர் - மச்சிலிப்பட்டினம் இடையே இன்று கரையைக் கடக்கிறது மிக்ஜாம் புயல்!

author img

By ANI

Published : Dec 5, 2023, 8:25 AM IST

Michaung Cyclone update: நேற்று தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல், இன்று ஆந்திராவின் தெற்கே நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநில நெல்லூர், மச்சிலிபட்டணம் இடையே கரையைக் கடக்கிறது மிக்ஜாம் புயல்
ஆந்திர மாநில நெல்லூர், மச்சிலிபட்டணம் இடையே கரையைக் கடக்கிறது மிக்ஜாம் புயல்

சென்னை: மிக்ஜாம் புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடலின் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக மாறி உள்ளது.

இந்த தீவிரப் புயல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், மத்திய கிழக்கு கடல் பகுதியில் சென்னையின் வடக்கு பகுதிகளில் இருந்து 130 கி.மீ தூரத்திலும், பாப்தலாவின் தெற்கே 180 கி.மீ தூரத்திலும், மச்சிலிப்பட்டினம் பகுதியின் தென் மேற்கு பகுதிகளில் 200 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தது.

மேலும், இந்த புயல் வட திசையில் நகர்ந்து, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றுடன், ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளான நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் பகுதிகள், பாப்தாலவிற்கு அருகே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கன மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் அவசரகால நடவடிக்கைகள் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும், புயலுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டு அறிந்தார்.

மேலும், இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சம்பவத்தால் 8 நபர்கள் உயிரிழந்த நிலையில், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. மேலும், பலத்த காற்றினால், மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தது.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால், பொதுமக்களில் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், மாநில பேரிடர் மீட்புப் படையினர், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக மாநகரின் பிரதான சாலைகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பெருமளவும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் அதிக அளவு மழைநீர் தேங்கியதை அடுத்து, விமான நிலையத்தை தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

மேலும், பிரமதர் மோடி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், புயலுக்குப் பின்பாக பாதிப்புகளை சரி செய்யத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்ய பிரதமர் மோடி உறுதியளித்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: குளம் போல் மாறிய சென்னை விமான நிலையம்! வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.