ETV Bharat / bharat

மணிப்பூர் விவகாரம்: 5வது குற்றவாளி கைது!

author img

By

Published : Jul 22, 2023, 3:00 PM IST

Updated : Jul 22, 2023, 4:53 PM IST

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய 5வது நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மணிப்பூர் விவகாரம்: 5வது குற்றவாளி கைது!
மணிப்பூர் விவகாரம்: 5வது குற்றவாளி கைது!

இம்பால்: கடந்த ஜூலை 19 அன்று வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 26 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பல ஆண்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடுவே ஊர்வலமாக அழைத்துச்செல்வது போன்று இருந்தது.

இதற்கு அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பொதுமக்களும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபரை முதலில் அந்த மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து, அதற்கு மறுநாள் (ஜூலை 20) கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை பெண்கள் தீ வைத்து கொளுத்தினர். மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இடம் பெற்று இருந்த சம்பவம் தொடர்பாக, ஜூன் 21 அன்றே சைகுல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அதிலும், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரது கணவர், கார்கில் போரில் போரிட்ட இந்திய ராணுவ வீரர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், இந்தச் சம்பவம் கடந்த மே 4 அன்று நடந்து உள்ளது. அதிலும், தனது தங்கையான பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரர், கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 5வது நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டு உள்ள 5வது நபரின் வயது 19 ஆகும். மேலும், இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டு உள்ள 4 பேருக்கும் நேற்று (ஜூலை 21) முதல் 11 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மணிப்பூரில் மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மெய்தீஸ் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்து வீடுகள், வாகனங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்த வன்முறைகளில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வன்முறையால் இணையதள சேவை அம்மாநிலத்தில் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம்; பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனம்!

Last Updated :Jul 22, 2023, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.