ETV Bharat / bharat

பவானிபூர் இடைத்தேர்தல் - அசுர வேட்டையாடிய மம்தா பானர்ஜி

author img

By

Published : Oct 3, 2021, 2:31 PM IST

மேற்கு வங்கம் மாநிலம் பவானிபூரில் நடந்த இடைத்தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார்.

மம்தா பானர்ஜி வெற்றி
மம்தா பானர்ஜி வெற்றி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சரும் திருணமுல் தலைவருமான மம்தா வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாடத்தை ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

கரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்தத் தேர்தலில் திருணமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

அதேபோல மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைச்சர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு இருந்தனர். இருந்தாலும்கூட அங்கு பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் திருணமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால், அதேநேரம் நந்திகிராம் தொகுதியின் முடிவுகள் திருணமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. வாக்கு அவருக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவியது. நள்ளிரவு வரை சென்ற வாக்கு எண்ணிக்கையில் சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி மம்தா, இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்தார்.

இதனால், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமலேயே மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சட்டப்படி சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதலமைச்சராக பதவியேற்றால், அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டும். மம்தா போட்டியிட ஏதுவாக பவானிபூர் தொகுதியில் வென்ற திருணமுல் அமைச்சர் ஷோவன்தேவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா என்ற வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில், பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்றுவந்தது. இச்சூழலில் மம்தா சுமார் 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை வகித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.

இதையும் படிங்க: நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.