ETV Bharat / bharat

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம்.. தப்புமா பாஜக அரசு! நடைமுறை என்ன?

author img

By

Published : Jul 26, 2023, 3:40 PM IST

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஏற்றுக் கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதிக்க தேதியை அறிவிப்பதாக கூறினார்.

Parliament
Parliament

டெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட நிலையில், விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதியை சபாநாயகர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறத்தாழ 26 எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றன. இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டன. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரின் 5வது நாளான இன்று (ஜூலை. 26) மக்களவையில் அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவு கோகாய், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

முன்னதாக தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பி. நம நாகேஸ்வர் ராவ்வும், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை வழங்கி இருந்தார். அந்த நோட்டிசையும் ஏற்றுக் கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சி தலைவர்களுடனும் விவாதித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசின் மீது விவாதம் நடத்துவதற்கான தேதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

அதேநேரம், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தப்புமா என்ற விவாதம் தற்போது எழுந்து உள்ளது. மக்களவையில் ஒட்டுமொத்த 543 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தற்போது 5 எம்.பிக்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவியில் ஒட்டுமொத்தமாக 330 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதேநேரம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணிக்கு (INDIA) 140 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவே எளிதில் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை மணிப்பூர் வன்முறை, அதானி விவாகரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து வாய் திறக்க வைக்க முடியும் என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் உச்சபட்சம்? மக்களவையில் அறிக்கை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.