ETV Bharat / bharat

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவராகக் குமாரசாமி; தேவகவுடா நியமித்தார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 4:11 PM IST

New JDS President: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடாவின் மகனும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Kumaraswamy appointed as the new president of JDS disband of state executive including CM Ibrahim
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவராகக் குமாரசாமி

பெங்களூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal - JDS) இந்த முறை தேர்தலைத் தனித்து எதிர் கொண்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கசப்பான அனுபவமாக அமைந்தது.

இந்நிலையில் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தேசிய கட்சிகள் தயாரான நிலையில், மதச் சார்பற்ற ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (National Democratic Alliance) இணைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகனும் முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான குமாரசாமி டெல்லி சென்று, பாஜக தலைவர்களைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். இதுகுறித்த தகவலை பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டா, அமித்ஷா அவர்களது X சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம், பாரதீய ஜனதா உடன் கூட்டணியில் இணைந்ததில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு விருப்பம் இல்லை எனத் தகவல்கள் வெளிவந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்ததற்கு அந்த கட்சியின் கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினர். ஜேடிஎஸ் தலைவர்கள், பாஜக கூட்டணியில் இணைந்ததற்குப் பதிலாகக் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கலாம் எனக் கூறியதாகவும் தகவல்கள் வந்தபடி இருந்தது.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் கர்நாடகா மாநில தலைவரான சி.எம்.இப்ராஹிம், குமாரசாமி தன்னிச்சையாக டெல்லி சென்று கூட்டணி குறித்து முடிவெடுத்திருப்பதாகக் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், பாஜகவுடனான கூட்டணியைத் தனது தலைமையிலான கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏற்காது எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவரான சி.எம்.இப்ராகிம் மற்றும் சில நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவரான குமாரசாமியை, கர்நாடக மாநிலத் தலைவராக நியமிப்பதாக தேவகவுடா அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் திடீரென மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கட்சியில் நிலவும் சூழல் காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் உடைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் கூர் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, தற்போது கர்நாடக முதலமைச்சராக இருக்கும் சித்தராமையா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்தபோது தேவகவுடாவிற்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது கட்சியில் பிளவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்து குவிப்பு வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு ஏமாற்றம்! கர்நாடக உயர் நீதிமன்றத்தால் உருவான சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.